சாமியே சரணம் ஐயப்பா... கார்த்திகை பிறந்தது... ஐயப்பனுக்கு மாலை அணிந்து பக்தர்கள் விரதம்
கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர்.
சென்னை: கார்த்திகை மாதம் முதல் நாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு தங்களது விரத்தைத் தொடங்குவது வழக்கம். இன்று அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் குற்றால அருவியில் புனித நீராடி மாலை அணிந்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் சென்று ஐயப்பனை தரிசிப்பார்கள்.
மண்டல பூஜையை முன்னிட்டு 15ஆம் தேதி மாலையே சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டதால் ஒருசிலர் நேற்றே மாலை அணிந்தனர். இன்று மாதப்பிறப்பை முன்னிட்டு பலரும் கோவில்களில் குருசாமி தலைமையில் மாலை அணிந்தனர்.
மாலை அணிந்த பக்தர்கள்
சென்னை மகாலிங்கபுரம், ராஜா அண்ணாமலைபுரம், அண்ணாநகர் ஆகிய இடங்களில் உள்ள ஐயப்பன் கோவில்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
குருசாமி தலைமையில் விரதம்
பக்தர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து ஒவ்வொரு பக்தரும் மாலை அணிந்து கொண்டனர். சிறார்கள் முதல் வயதான பெண்கள் வரை பலரும் மாலை போட்டுக் கொண்டனர்.
புனித நீராடிய பக்தர்கள்
குற்றால அருவிகளில் ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே புனித நீராடிவிட்டு குற்றால நாதரை வணங்கி மாலை அணிந்து கொண்டனர். அவர்களுக்கு குருசாமி மாலை அணிவித்தார்.
மாலை, வேஷ்டி விற்பனை
ஐயப்ப சீசனை முன்னிட்டு மாலை போடும் பக்தர்கள் துளசிமணி மாலைகள் மற்றும் கருப்பு, நீலம், காவி போன்ற வேட்டிகள் விற்பனை களைகட்டியுள்ளது. விரதம் இருந்து செல்லும் பக்தர்களை வரவேற்க சபரிமலையும் தயாராகி விட்டது.
அலங்கார பிரியர்கள்
அதிகாலை எழுந்து குளிந்து சந்தனம் ஜவ்வாது மணக்க அலங்கரித்துக்கொண்டு ஐயப்ப பக்தர்கள் சரணகோஷம் கூறுவதை கேட்பதே அலாதியான சுகம். 48 நாட்களுக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு இது ஒரு சுகமான அனுபவமாக இருக்கும்.
முதல்நாளே குவிந்த கூட்டம்
கார்த்திகை மாதம் முதல்நாளான இன்றே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர். சபரிமலை வனமெங்கும் சரண கோஷமும், நெய்வாசமும் இனி இரண்டு மாதங்களுக்கு நிறைந்திருக்கும்.