‘என்னாது பேனரைக் கழட்டணுமா..?: போலீஸ் உத்தரவால் ஆவேசமான ‘பர்த்டே பாய்’ அழகிரி!
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பிறந்தநாளை ஒட்டி வைக்கப் பட்டுள்ள பேனர்கள் மற்றும் கட்-அவுட்களை அகற்ற வேண்டும் என போலீசார் திடீர் நெருக்கடி கொடுத்ததால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரியின் பிறந்தநாள் இன்று. மதுரை ராஜா முத்தையா மண்டபத்தில் அழகிரியின் பிறந்த நாள் வெகு விமரிசையாக கொண்டாப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னரே அழகிரி இல்லத்தில் இருந்து ராஜா முத்தையா மண்டபம் வரை, அழகிரி ஆதரவாளர்கள், கொடி, தோரணங்கள், கட்-அவுட், பேனர்கள் வைத்து அமர்க்களப் படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென அழகிரி ஆதர்வாளர்களிடம் போலீசார், கட்-அவுட் பேனர்களை அகற்றச்சொல்லி உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அழகிரி ஆதரவாளர்கள் உடனடியாக அழகிரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்டு ஆவேசமடைந்த அழகிரி, ‘நேற்று வரை அனுமதி கொடுத்துவிட்டு, இன்று ஏன் இப்படி திடீர் நெருக்கடி கொடுக்கிறார்கள். இவ்வளவு செலவு செய்து வைத்துள்ளீர்கள். அவற்றை அகற்ற வேண்டாம். காவல்துறை எத்தனை வழக்கு வேண்டுமானால் போட்டுக்கொள்ளட்டும். நான் பார்த்துக்கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளாராம்.
ஆனபோதும், சில இடங்களில் போலீஸ் உத்தரவை அடுத்து பேனர்கள் அகற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், மதுரையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.