மதுரையில் அழகிரி- அமைச்சர் செல்லூர் ராஜூ திடீர் சந்திப்பு.. பரபரப்பு!
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி அமைச்சர் செல்லூர் ராஜூவை சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
Recommended Video
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி அமைச்சர் செல்லூர் ராஜூவை சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
தமிழக அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும், அதிமுக கட்சியில் முக்கிய உறுப்பினராகவும் உள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜு. இவரது தாயார் ஒச்சம்மாள் தனது 95 வயதில் கடந்த 30ஆம் தேதி காலமானார்.
மதுரையில் வசித்து வந்த இவர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
அமைச்சர் வீட்டில் அழகிரி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி அமைச்சர் செல்லூர் ராஜூவின் வீட்டிற்கு இன்று நேரில் சென்றார்.
உற்றுநோக்கப்பட்ட சந்திப்பு
அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் மறைவுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார். இந்த சந்திப்பு உற்றுநோக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
நீங்கள் எதிர்பார்த்தது இல்லை
அதற்கு பதிலளித்த அழகிரி, அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரிக்க வந்தேன் அவ்வளவுதான். நீங்கள் எதிர்பார்த்தது போன்று வேறு ஒன்றும் இல்லை என்று தனது பாணியில் அழகிரி பதிலளித்தார்.
அழகிரியை புகழ்ந்த அமைச்சர்
அண்மையில் நடைபெற்ற அழகிரியின் பேரணி குறித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ அழகிரிக்கு வந்த கூட்டத்தை புகழ்ந்தார். கருணாநிதியின் நினைவஞ்சலி பேரணியில் அழகிரி மிகப்பெரிய கூட்டத்தை கூட்டியுள்ளார் என தெரிவித்தார்.
அமைச்சர் கருத்து
ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி கருணாநிதி மறைவுக்கு அமைதி பேரணியை நடத்தியது அழகிரிக்கு பல்வேறு மாவட்டங்களில் ஆதரவு இருப்பதை காட்டுகிறது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். தேர்தலில் அவருக்கு எவ்வளவு ஆதரவு என்பது தேர்தலின் போது தான் தெரியும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.