திமுகவில் மீண்டும் அழகிரியா? அது வதந்தி என்கிறார் ஸ்டாலின்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி திராவிட முன்னேற்றக்கழகத்தில் மீண்டும் இணையப் போவதாக வெளியான தகவல் வெறும் வதந்திதான் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மீண்டும் அக்கட்சியில் இணைவார் என்றும் தலைவர் கருணாநிதிதான் இதற்கான வேலைகளை துவக்கியதாகவும் தகவல் வெளியானது. பிறந்தநாள் தினத்தன்று தனது அப்பாவின் ஆசியுடன் அழகிரி இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை.
கோபாலபுரத்தில் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்காத காரணத்தால் தனது பெற்றோர்களைக் கூட பார்க்காமல் மகன் வீடு உள்ள போயஸ்கார்டனிலேயே தங்கிவிட்டதாக தகவல்கள் வெளியானது. அது உண்மைதான் என்பது பேசிய அழகிரியும் சென்னையில் இருந்த போதும் பிறந்த நாளில் யாரையும் சந்திக்கப் போகவில்லை. நான், திமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவது குறித்தெல்லாம் யாரிடமும் எதுவும் கேட்கவில்லை என்று கூறினார்.
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில், வியாபார பிரதிநிதிகளுடன் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், போலி வாக்காளர் பட்டியல் பற்றி திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
அப்போது அவரிடம் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க. அழகிரியை கட்சியில் மீண்டும் சேர்க்கப் போவதாக தகவல் பரவுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், தகவல்தானே பரவுகிறது? அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு பலகாலம் ஆகிவிட்டது எனவே இதுபற்றி கருத்து கூறவேண்டிய அவசியம் இல்லை என்றார்.
ஸ்டாலின் உறுதியாக சொல்லியிருப்பதைப் பார்த்தால் அறிவாலயத்தின் வாசல் அழகிரிக்கு இனி எப்போதும் திறக்காது போலிருக்கிறதோ?