செயற்குழு முடிவுக்காக காத்திருக்கும் அழகிரி.. உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் திமுகவினர்!
கட்சி தொடர்பான தனது முடிவை இன்னும் 2 நாளில் அறிவிப்பதாக முக அழகிரி கூறியிருப்பது திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: கட்சி தொடர்பான தனது ஆதங்கத்தை இன்னும் 2 நாளில் அறிவிப்பதாக முக அழகிரி கூறியிருப்பது திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு போன்றே திமுகவிலும் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் அழகிரி.
இதனால் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் கட்சியில் எந்த தொடர்பும் இன்றி ஒதுங்கியே உள்ளார் அழகிரி. ஆனால் அவ்வப்போது ஸ்டாலின் குறித்தும் கட்சி நிர்வாகம் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.
அமைதியாக உள்ள ஸ்டாலின்
இந்நிலையில் கருணாநிதி மறைவுக்கு பிறகு கட்சியில் தனக்கு முக்கிய பொறுப்பு வேண்டும் என எதிர்பார்க்கிறார் அழகிரி. ஆனால் அதற்கு கட்சியின் செயல்தலைவரான ஸ்டாலின் இதுவரை சமிக்ஞையும் காட்டவில்லை என தெரிகிறது.
எனக்கே ஆதரவு
இந்நிலையில் கருணாநிதி மறைவுக்கு பிறகு நாளை திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. ஆனால் அதற்கு முந்தைய நாளான இன்று கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அழகிரி, திமுகவின் உண்மையான தொண்டர்களும் விசுவாசிகளும் எனக்குதான் ஆதரவாக உள்ளனர் என கெத்தாக பேட்டியளித்தார்.
இன்னும் 3 நாட்களில்
இதனை ஸ்டாலின் தரப்பு மிரட்டலாகவே பார்க்கிறது. இதைத்தொடர்ந்து கோபாலபுரம் சென்ற அழகிரி,தனது ஆதங்கத்தை இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.
செயற்குழு முடிவுக்காக வெய்ட்டிங்
அழகிரியின் மெரினா பேட்டி ஏற்கனவே கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது கோபாலபுரம் பேட்டி செயற்குழு கூட்ட முடிவுக்காக அவர் காத்திருப்பதை வெளிக்காட்டுவதாக உள்ளது.
அழகிரி முக்கிய அறிவிப்பு?
செயற்குழு முடிவை பொறுத்து அழகிரி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்பு அழகிரி செய்யும் ஒவ்வொரு செயலும் அவரது ஒவ்வொரு பேட்டியும் உற்று நோக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.