கோபாலபுரத்தில் தயாளு அம்மாளுடன் மு.க.அழகிரி சந்திப்பு- கருணாநிதியை சந்திக்கவில்லை!
சென்னை: தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி சென்னை கோபாலபுரத்தில் தாய் தயாளு அம்மாளை மட்டும் சந்தித்து பேசினார். ஆனால் வீட்டில் இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவர் சந்திக்கவில்லை.
தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கு கருணாநிதியும், பொதுச்செயலாளர் பதவிக்கு அன்பழகனும், பொருளாளர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும் போட்டியிடுவதற்கான மனுக்களை அவர்களின் கையெழுத்து பெற்று, தாக்கல் செய்யப்பட்டது.
பகல் 11 மணியளவில் மு.க. ஸ்டாலின் அறிவாலயம் வந்தார். பின்னர் அவர் தனது அறையில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதே நேரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவாலயம் செல்லாமல் நேற்று வீட்டில் இருந்தார்.
இந்தநிலையில் மு.க.அழகிரி கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு செல்ல இருப்பதாக நேற்று மதியம் தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து கருணாநிதி வீடு முன்பு ஏராளமான பத்திரிகையாளர்கள் குவிந்தனர்.
மதியம் 1.45 மணியளவில் மு.க.அழகிரி கோபாலபுரம் வந்தார். அங்கு அவர் தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து பேசினார். அவரது உடல் நலம் குறித்தும் அவர் விசாரித்தார். இந்த நேரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டின் மேல் அறையில் இருந்தார். அவரை மு.க.அழகிரி சந்திக்கவில்லை.
பின்னர் 2.20 மணியளவில் மு.க.அழகிரி பத்திரிகையாளர்களை சந்திக்காமல் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்று விட்டார்.