ஓபிஎஸ்க்கு அம்மா.. அழகிரிக்கு அப்பா.. ஆதங்கத்தை கொட்டும் ஸ்பாட்டான மெரினா!
ஓபிஎஸ் போலவே அழகிரியும் தனது ஆதங்கத்தை மெரினா நினைவிடத்தில் கொட்டித் தீர்த்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஓபிஎஸ் போலவே அழகிரியும் தனது ஆதங்கத்தை மெரினா நினைவிடத்தில் கொட்டித் தீர்த்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதிக்கு பின் அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக பொறுப்பேற்றார் ஓபிஎஸ்.
இதைத்தொடர்ந்து அப்போதைய முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கும் சசிகலா தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ் தியானம்
பின்னர் கடந்த 2017 பிப்ரிவரி 8ஆம் தேதி இரவு திடீரென ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், 40 நிமிடங்களுக்கும் மேலாக அங்கு தியானம் மேற்கொண்டார்.
சசி குடும்பம் டார்ச்சர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை கூறினார். சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் தன்னை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி கட்டாயப்படுத்தியதாகவும் சசிகலா குடும்பத்தின் டார்ச்சரால்தான் தான் பதவி விலகியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார்.
ஒதுக்கப்பட்ட சசி குடும்பம்
ஓபிஎஸ் தியானத்திற்கு பிறகு அளித்த இந்த பேட்டி தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற கூவத்தூர் கூத்துகள், எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானது, எடப்பாடி தரப்பு சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்தது, ஓபிஎஸ் துணை முதல்வரானது, கட்சியும் சின்னமும் ஈபிஎஸ் ஓபிஎஸ் தரப்புக்கு கிடைத்ததெல்லாம் தனிக்கதை.
கருணாநிதி நினைவிடத்தில்..
இந்நிலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி தனது தந்தையின் நினைவிடத்தில் இன்று குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார்.
ஆதங்கத்தை கொட்டிய அழகிரி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனது ஆதங்கத்தை தந்தையின் நினைவிடத்தில் வேண்டிக்கொண்டதாக கூறினார். உண்மையான விசுவாசிகள் தன்னுடன் இருப்பதாக கூறிய அவர் தான் தற்போது திமுகவில் இல்லை. அதனால் செயற்குழு குறித்து தான் பேசவில்லை என கூறி மறுத்துவிட்டார்.
ஓபிஎஸ்க்கு அம்மா, அழகிரிக்கு அப்பா
ஓபிஎஸ், அம்மா என்று பாசத்தோடு அழைக்கும் ஜெயலலிதா நினைவிடத்தில் தனது ஆதங்கத்தை கொட்டி ஒரு புரட்சியை நடத்தினார். அதேபோல் தற்போது அழகிரி தனது அப்பாவின் நினைவிடத்தில் ஆதங்கத்தை கொட்டியுள்ளார். இது என்ன மாதிரியான புயலை கிளப்பபோகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்..