திமுகவில் இருந்து விலகி வேறு கட்சிக்கு யாரையும் போகச் சொல்லவில்லை : மு.க.அழகிரி
மதுரை: தி.மு.க.வில் இருந்து விலகி மாற்றுக்கட்சியில் சேருங்கள் என்று நான் யாரையும் சொல்லவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். தி.மு.க.வுக்கு எதிராக எந்த காலக்கட்டத்திலும் செயல்படமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் நடிகர் நெப்போலியன் சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா சனிக்கிழமையன்று சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை. மு.க.அழகிரியின் ஆசியோடுதான் பாஜகவில் இணைந்தேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர், அழகிரியும் மனஉளைச்சலோடுதான் இருக்கிறார் என்றும் நெப்போலியன் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு, மு.க.அழகிரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க.வில் உட்கட்சி ஜனநாயகம் வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதற்காகத்தான் தவறுகளை சுட்டிக்காட்டி, அந்த தவறுகளை களைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.
பாஜகவில் சேர்ந்துள்ள நடிகர் நெப்போலியன் எனது ஆசியோடுதான் அந்த கட்சியில் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதுபோல ராமநாதபுரம் எம்.பி.யாக இருந்த ரித்தீசும் அ.தி.மு.க.வில் சேர்ந்த போது இதே கருத்தை தெரிவித்தார்.
நான் யாரையும் தி.மு.க.வில் இருந்து விலகி வேறு கட்சியில் சேருங்கள் என்று சொல்லவில்லை. சொல்லவும் மாட்டேன். தி.மு.க.வின் வளர்ச்சிக்காக சில கருத்துக்களை தெரிவிக்கிறேனே தவிர, தி.மு.க.வுக்கு எதிராக எந்த காலக்கட்டத்திலும் செயல்படமாட்டேன் என்றும் அழகிரி கூறியுள்ளார்.