அழகிரிக்கு 2 குஷி!... தேர்தல் வழக்கில் ரிலீஃப்- மகனுக்கு ஜாமீன் நிபந்தனை தளர்வு
மதுரை: மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் மு.க.அழகிரி வெற்றி பெற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இப்படி அடுத்தடுத்து 2 சந்தோஷமா செய்திகள் வந்ததால் அழகிரி வட்டாரம் குஷியடைந்துள்ளது.
மதுரையில் கிரானைட் முறைகேடு வழக்கில் துரை தயாநிதி மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் துரைதயாநிதி.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், துரை தயாநிதிக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. மேலும், வெளிநாடு செல்வது பற்றி துரை தயாநிதி 10 நாட்களுக்கு முன் தகவல் தர வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தது.
இந்நிலையில், நிபந்தனையை தளர்த்தக் கோரி துரைதயாநிதி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டது.
மேலும், வெளிநாடு செல்வது பற்றி 3 நாட்களுக்கு முன் தகவல் அளித்தால் போதுமானது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.