ஸ்டாலினுக்கு ஒரு உதயநிதி... அழகிரிக்கு துரை தயாஅழகிரி.. வாரிசு அரசியலை நிரூபிக்கும் சகோக்கள்?
Recommended Video
சென்னை: ஸ்டாலினுக்கு ஒரு உதயநிதி கிடைத்தது போல் அழகிரியும் துரை தயாநிதியை அரசியல் களத்துக்கு கொண்டு வருகிறார். இதனால் வாரிசு அரசியலை நிரூபிக்கின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக என்றாலே வாரிசு அரசியலுக்கு பெயர் போன கட்சி என சொல்லப்படுகிறது. கருணாநிதி, அவரது மகன்கள் அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, உறவினர்கள் தயாநிதிமாறன் ஆகியோர் பதவி சுகத்தை அனுபவித்தனர்.
இவர்கள் குடும்பம் மட்டுமல்லாமல் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் தங்கள் மகன், மகள் என அண்ணா அறிவாயலத்தை சூழ்ந்து கொண்டனர். கட்சியில் உழைப்போருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காமல் வாரிசுகளுக்கே வாய்ப்புகள் வழங்கப்படுவதற்காகவும் அங்கலாய்த்து கொண்டனர்.
திமுக ஆர்ப்பாட்டம்
எதிர்க்கட்சிகளும் வாரிசு அரசியல் என்ற விஷயத்தையே கையில் எடுத்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது.
உதயநிதி
அப்போது சேப்பாக்கத்தில் அறிவித்த ஆர்ப்பாட்டத்தில் முதல் முறையாக திமுக கொடியேந்தி உதயநிதி ஸ்டாலின் தென்பட்டார். இதையடுத்து பெரும்பாலான கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் உதயநிதியை பார்க்க முடிந்தது.
சமாதிக்கு சென்ற வாரிசுகள்
எப்படி ஸ்டாலினும் அழகிரியும் எதிரெதிர் துருவங்களாக (கட்சி ரீதியில்) உள்ளனரோ அது போல் இருவரது மகன்களையும் களமிறக்க இருவரும் போராடி வருகின்றனர். திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்தவுடன் அவரது சமாதிக்கு அழகிரி சென்ற போது அவரது மகன் துரை தயா அழகிரியும் மகள் கயல்விழியையும் பார்க்க முடிந்தது.
விலகவே விலகாது
அதுபோல் இதுவரை அரசியல் பக்கமே திரும்பி பார்க்காமல் இருந்த துரை தயாநிதி, முதல்முறையாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு எதிராக டுவீட் போட்டார். இதைத் தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராகவும் டுவீட் போட்டுள்ளார். இந்நிலையில் இன்று அழகிரி நடத்திய பேரணியிலும் மகன் துரை பங்கேற்றதால் வாரிசு அரசியல் நம் தமிழகத்தை விட்டுவிலகவே விலகாது என மக்கள் புலம்புகின்றனர்.