அண்ணனை மீண்டும் திமுகவில் சேர்க்க வேண்டும்.. கையெழுத்து இயக்கம் தொடங்கும் அழகிரி உடன்பிறப்புகள்!
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை திமுகவில் மீண்டும் சேர்க்கக்கோரி அவரது ஆதரவாளர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கவுள்ளனர்.
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை திமுகவில் மீண்டும் சேர்க்கக்கோரி அவரது ஆதரவாளர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கவுள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கடந்த 2014ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். நிச்சயம் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவோம் என எதிர்பார்த்திருந்தார் அழகிரி.
அதற்குள் திமுக தலைவராக இருந்த கருணாநிதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை தேறி வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் கருணாநிதி காலமானார்.
இதைத்தொடர்ந்து திமுக தலைவரானார் ஸ்டாலின். கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அழகிரி குறித்து வாய் திறக்காமல் உள்ளார் ஸ்டாலின்.
இந்நிலையில் அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கக்கோரி அவரது ஆதரவாளர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கவுள்ளனர். அறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி மதுரை சிம்மக்கல்லில் உள்ள அண்ணா சிலைக்கு அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் அவரது ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அழகிரி ஆதரவாளர் மன்னன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அழகிரியையும், எங்களையும் உடனே திமுகவில் சேர்க்க வேண்டும். இது தொடர்பாக அழகிரி வீட்டிலிருந்து கையெழுத்து இயக்கம் தொடங்கி திமுக தலைமைக்கு அனுப்ப உள்ளோம், என்று அவர் கூறினார்.