பேரணியை பத்தி கேக்குறன்னு சொல்லிட்டு இப்போ ஊரணியை பத்தி கேக்குறீங்க.. ஸ்டாலினை நக்கலடித்த அழகிரி!
ஸ்டாலினை ஊரணி எனக்கூறி முக அழகிரி நக்கலடித்துள்ளார்.
Recommended Video
மதுரை: ஸ்டாலினை ஊரணி எனக்கூறி முக அழகிரி நக்கலடித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதிலிருந்தே கட்சிக்கு எதிரான கருத்துக்களையே அவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
தற்போது கருணாநிதி மறைவுக்கு பிறகு கட்சியில் தான் மீண்டும் இணைத்துக்கொள்ளப்படுவோம் என எதிர்பார்த்தார் அழகிரி. ஆனால் அதற்கான அறிகுறியே இல்லை.
இணைக்க வாய்ப்பில்லை
அண்மையில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் கூட ஸ்டாலின் ஆதரவாளர்கள் அழகிரிக்கு எதிராகவே பேசினர். இதனால் அழகிரி மீண்டும் கட்சியில் இணைக்கப்பட வாய்ப்பில்லை என தெரிகிறது.
செப்டம் 5ல் பேரணி
இதனால் அழகிரி ஸ்டாலின் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் வரும் செப்டம்பர் 5-ம் தேதி கருணாநிதி நினைவிடத்துக்கு பேரணி நடத்த அழகிரி திட்டமிட்டுள்ளார்.
அண்ணாசாலை டூ நினைவிடம்
இந்நிலையில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அழகிரி, செப்டம்பர் 5-ம் தேதி அண்ணா சாலை, வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை யிலிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடத்த இருக்கிறேன்.
எந்தக் கட்சியும் இல்லை
இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள். கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர் என்பதை அப்போது அனைவரும் புரிந்து கொள்வார்கள். எனது பின்னணியில் பாஜக உட்பட எந்தக் கட்சியும் இல்லை என தெரிவித்தார்.
ஆதங்கத்தை வெளிப்படுத்துவேன்
இதனால் திமுகவிலும் கருணாநிதியின் குடும்பத்திலும் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் முக அழகிரி செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, நேரம் வரும்போது எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவேன்.
இணைப்பதாக தெரியவில்லை
சென்னையில் நடைபெறும் பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள். செப்டம்பர் 5 ஆம் தேதி பேரணிக்கு பிறகு அடுத்தகட்ட முடிவை அறிவிப்பேன். தற்போதைக்கு திமுகவில் என்னை இணைப்பதாக தெரியவில்லை" என்றார்.
ஸ்டாலின் ஊரணி
தொடர்ந்து ஸ்டாலின் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அழகிரி பேரணியை பற்றி கேட்கிறேன் என கூறிவிட்டு இப்போது ஊரணியை பற்றி கேட்கிறீர்களே என்று ஸ்டாலினை ஊரணி என நக்கலடித்தார் அழகிரி.