ஆழியாறு அணையிலிருந்து பாசான சாகுபடிக்கு நாளை முதல் தண்ணீர் திறப்பு - முதல்வர் ஜெ. அறிவிப்பு
கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு படுகை பாசன அமைப்பின்கீழ் உள்ள பாசன சாகுபடிக்காக நாளை முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம் ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு படுகை பாசன அமைப்பின்கீழ் உள்ள பாசன சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடக்கோரி கோயம்புத்தூர் மாவட்ட வேளாண் மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று ஆழியாறு அணையிலிருந்து பொள்ளாச்சிக் கால்வாய், வேட்டைக்காரன்புதூர் கால்வாய், சேத்துமடைக் கால்வாய் மற்றும் ஆழியாறு ஊட்டுக்கால்வாய் ஆகிய கால்வாய்களின் மூலம் பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்.
இதனால், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள 22,332 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.