'ஆழ்வார்கள் ஆய்வு மைய' ஜெகத்ரட்சகனுக்கு தி.மு.க.வில் 'கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை புரவலர் பதவி!!
சென்னை: ஆழ்வார்கள் ஆய்வு மையம் நடத்தி வரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு தி.மு.க.வில் 'கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் புரவலர் பதவி கொடுக்கப்பட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
லோக்சபா தேர்தல் முடிந்தது முதலே தி.மு.க.வில் மாற்றங்கள் தொடங்கிவிட்டன. ஒருவழியாக தி.மு.க. மாவட்டங்களை 65 ஆகப் பிரித்து இதில் பெரும்பாலானவற்றுக்கு 'பஞ்சாயத்து' மற்றும் 'மோதல்' இல்லாத வகையில் தேர்தல் நடத்தி மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர்.
தி.மு.க. வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சென்னையிலேயே பிற மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெரும் ஆவலை ஏற்படுத்தியிருந்தது தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியல்தான்.
இந்தப் பட்டியல் கடந்த 29-ந் தேதி வெளியிடப்பட்டது. தி.மு.கவின் உயர்நிலை செயல்திட்டக் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்த ஆற்காடு வீராசாமிக்கு இச்செயல்திட்டக் குழுவில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதிலும் தன் மகன் மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தலில் தோற்றதிலும் கடும் அதிருப்தியில் இருக்கும் நெல்லை கருப்பசாமி பாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் ஆகியோரும் இக்குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இப்படி அறிவிக்கப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியலில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு கொடுக்கப்பட்ட பதவிதான். அவருக்கு கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் புரவலர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜெகத்ரட்சகன் ஏற்கெனவே 'ஆழ்வார்கள் ஆய்வு மையம்' என்று ஆன்மீக கருத்துகளைப் பரப்பி வருகிறவர். அவரது கொள்கைக்கு நேர் எதிரான 'பகுத்தறிவு' பேரவைக்கான புரவலர் பதவி கொடுக்கப்பட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
இதேபோல் இளைஞர் அணி செயலாளர் பதவிக்கு திருச்சி அன்பில் பொய்யாமொழி மகன் அன்பில் மகேஷ் அல்லது வெள்ளகோவில் சாமிநாதனை அமர்த்த மு.க.ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டிருக்கிறார். ஆனால் கருணாநிதியோ இருவரும் வேண்டாம் என்று சொல்ல ஸ்டாலினே மீண்டும் இளைஞரணிச் செயலராகிவிட்டார்.