கி.மு., கி.பி. பயன்பாட்டை தவிர்த்து, பொது ஆண்டுக்கு முன்பு, பின்பு என கல்வித்துறை மாற்றியது சரியா?
தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில் கி.மு., கி.பி., - பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டு மாற்றம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வி புதிய பாடத்தில் கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்கு பின் என்பதை பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டுக்கு பின் என்று மாற்றப்பட்டுள்ளது குறித்து அரசியல் தலையீடுகள் ஏதேனும் உள்ளதா என விவாதங்கள் எழுந்துள்ளன.
வரலாற்றில் கால வரையறையைக் குறிப்பிடும்போது சர்வதேச அளவில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்படுகிறது. அதன் அடிப்படையில், வரலாற்றில் காலக் கணக்கை கிறிஸ்துவுக்கு முன் என்றும் கிறிஸ்துவுக்குப் பின் என்றும் வரையறுக்கப்பட்டு கணக்கிடப்பட்டு வந்தது.
கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்குப் பின் என்பது சர்வதேச வரலாற்றையே கிறிஸ்தவ மதம் சார்ந்து கணக்கிடுவது சரியில்லை என்று சில வரலாற்றாசிரியர்கள் தங்களுடைய வாதங்களை முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து, சில வரலாற்றாசிரியர்கள் கி.மு., கி.பி., என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக அதே ஆண்டுக் கணக்கில் வரலாற்றில் காலத்தைக் குறிப்பிடுவதற்கு பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டு என்று குறிப்பிட்டு தங்களுடைய வரலாற்று நூல்களை எழுதியுள்ளனர்.
இந்த முறை சர்வதேச அளவில் வரலாற்று ஆசிரியர்கள் பலரும் கைக்கொண்டு தற்போது அனைவரும் பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டு என்று குறிப்பிடுவது வரலாற்று நூல்களில் வழக்கமாகிவிட்டது.
ஆனால், தமிழக அரசின் வரலாற்று பாட நூல்களில் மட்டும் இது காலம் வரை கி.மு., கி.பி. என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு தமிழக பள்ளிக்கல்வித் துறை புதிய பாடத்திட்டத்தில் வரலாற்று நூல்களில் பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டு என்று மாற்றப்பட்டுள்ளது.
பாடநூல்களில் செய்யப்பட்ட இந்த மாற்றத்துக்கு சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. மத்தியில் இந்துத்துவ கொள்கைகளைத் உயர்த்திப் பிடிக்கும் பாஜக ஆட்சி நடப்பதாலும், பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக அரசு இருப்பதாலும், பாட நூல்களில் கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்குப் பின் என்று இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டு இருந்த காலக் கணக்கை பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டு என்று மாற்றப்பட்டிருக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த விமர்சனங்கள் குறித்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஊடகங்களிடம் கூறுகையில், புதிய பாடத்திட்டத்தில் கி.மு. கி.பி. என்பதற்கு பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டு என்று குறிப்பிட்டிருப்பதில் அரசியல் தலையீடு ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழறிஞர் மாபொசி பிறந்த நாளான இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள மாபொசி சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"தமிழறிஞர் மாபொசி பிறந்த நாளை தமிழக அரசு விழாவாக நடத்த வேண்டும். தமிழக பள்ளிக் கல்வி புதிய பாடத்திட்டத்தில் கி.மு., கி.பி. என்பதை பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டுக்குப் பின் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இயேசு கிறிஸ்துவை தவிர்க்க வேண்டும் என்ற காரணம் இல்லை. புதிய பாடத் திட்டத்தில் படித்த அறிஞர்கள் மற்றும் வல்லுநர் குழுதான் இப்படி மாற்றி குறிப்பிட்டுள்ளனர்.
வரலாற்றை ஒரு மதச்சார்பின்மையுடன் குறிப்பிடும் நோக்கில் மாற்றப்பட்டுள்ளது. அதனால், இதில் அரசியல் தலையீடு ஏதும் இல்லை. இது குறித்து விமர்சனங்கள் வந்தால் பரிசீலிக்கப்படும். பாடத்திட்டத்தில் பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டு என்று மாற்றப்பட்டதற்கு ஏதேனும் எதிர்ப்புகள் வந்தால் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விளக்கம் அளிப்பார்" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், புதிய பாடத்திட்டத்தில் பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டு என்று மாற்றப்பட்டுள்ளது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான து.ரவிக்குமார் "எனது கோரிக்கைக்கு கிடைத்துள்ள வரலாற்று வெற்றி" என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரவிக்குமாரின் முகநூல் பதிவில், "வரலாற்றைக் குறிப்பிடும்போது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மையமாக வைத்து BC, AD - கிமு, கிபி என்று குறிப்பிடும் வழக்கம் மதச்சார்பின்மைக்குப் புறம்பானதாக இருப்பதால் அது கைவிடப்பட்டு BCE, CE - பொது ஊழிக்கு முன், பொது ஊழி எனக் குறிப்பிடும் வழக்கம் உலக அளவில் பின்பற்றப்படுகிறது. எனவே வரலாற்று நூல்களில் கிமு, கிபி என்பதற்கு பதிலாக பொஊமு, பொஊ எனக் குறிப்பிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என நான் எம்.எல்.ஏ வாக இருந்தபோது 02.09.2006 அன்று சட்டசபையில் கோரிக்கை விடுத்தேன். அது இப்போது செயல் வடிவம் பெற்றுள்ளது. தற்போது புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள பாடநூலில் கிமு , கிபிக்குப் பதிலாக பொது ஆண்டு, பொது ஆண்டுக்கு முன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மிகப்பெரிய வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள திரு உதயசந்திரன் ஐஏஎஸ் அவர்களுக்கு நன்றி." என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சட்டமன்றத்தில் ரவிக்குமார் எழுப்பிய வினாவும் அதற்கு அன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலும் என அவரது சட்டமன்ற உரை நூலை பதிவிட்டுள்ளார்.