இன்றுடன் முடிகிறது என்ஜினியரிங் கவுன்சிலிங்... 1 லட்சம் இடங்கள் காலியாகவே உள்ளது!
சென்னை: அண்ணாப் பல்கலைக்கழக பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், கடந்தாண்டை விட இந்தாண்டு மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாகவும், கலந்தாய்வு முடிந்த பிறகும் சுமார் 1 லட்சம் இடங்கள் காலியாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் 541 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவ-மாணவிகளை பி.இ., பி.டெக். முதலாம் ஆண்டு சேர்ப்பதற்கு பொது கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு கடந்த மாதம் 7-ந் தேதி தொடங்கியது.
மொத்த இடங்கள்...
தமிழ்நாட்டில் உள்ள 541 பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 77 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
கலந்து கொண்டவர்கள்...
சுமார் ஒரு மாதகாலம் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில் கல்நது கொண்டு இதுவரை 1 லட்சத்து 3 ஆயிரம் பேர் மட்டுமே கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
இன்றுடன் கடைசி...
கலந்தாய்வுக்கு வரும்படி அழைப்பு விடுத்தும் 56 ஆயிரம் பேர் இதுவரை வரவில்லை. இந்நிலையில், இன்றுடன் கலந்தாய்வு முடிவடைகிறது.
கலந்தாய்வு மூலம்...
கடந்த ஆண்டு 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் கலந்தாய்வு மூலம் கல்லூரிகளில் சேர்ந்தனர். ஆனால் தற்போதைய நிலவரப்படி, இந்த ஆண்டு 1 லட்சத்து 6 ஆயிரம் பேர்தான் கலந்தாய்வு மூலம் சேர்வார்கள் எனத் தெரிகிறது.
மாணவர் சேர்க்கை குறைவு...
எனவே கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 20 ஆயிரம் இடங்களில் மாணவர் சேர்க்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனடிப்படையில், கலந்தாய்வின் முடிவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாக இருக்கும்.
வகுப்புகள் தொடங்கின...
கலந்தாய்வு இன்று முடிவடைந்தாலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த 1-ந் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான என்ஜினீயரிங் கல்லூரிகளில் தொடங்கின.
தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள்...
கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) முடிந்தாலும், பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனியாக கலந்தாய்வு 6-ந் தேதி நடத்தப்பட உள்ளது. அதற்காக மாணவ-மாணவிகள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நேரில் வந்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை பெயரை பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருந்ததியின மாணவர்கள்...
அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் அருந்ததியின மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிரம்பாமல் சில இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களில் எஸ்.சி. இன மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கான கலந்தாய்வு 7-ந் தேதி நடக்கிறது. விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் 7-ந் தேதி காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை தங்கள் பெயரை பதிவு செய்து பின்னர் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். ஏற்கனவே ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்களும் கலந்தாய்வுக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.