தமிழக அரசின் பாராமுகம்.. பி.எட். படித்தும் வேலையின்றி தவிக்கும் கணினி ஆசிரியர்கள்
தமிழகம் முழுக்க 50,000க்கும் அதிகமான பி.எட் படித்த கணினி ஆசிரியர்கள் வேலையின்றி கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
சென்னை: தமிழகம் முழுக்க 50,000க்கும் அதிகமான பி.எட் படித்த கணினி ஆசிரியர்கள் வேலையின்றி கஷ்டப்பட்டு வருகிறார்கள். இவர்கள் பல்வேறு போராட்டம் நடத்தியும் கூட சரியான வேலைவாய்ப்பு இன்னும் உருவாக்கப்படவில்லை.
2011-ல் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் 6 முதல் 10 வகுப்புகளில் கணினி அறிவியல் பாடம் ஒரு தனிப்பாடமாகக் கொண்டுவரப்பட்டது. இது பெரிய வேலை வாய்ப்பட்டு உருவாக்கும் என நம்பி கணினி துறையில் பெரும்பாலானோர் பி.எட். படித்தார்கள்.
ஆனால், ஆட்சி மாற்றத்தினால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. இதற்காக ரூ.300 கோடி செலவில் கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. எல்லாம் வீணாக போனதுடன், வேலை வாய்ப்பும் பறிபோனது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கணினி அறிவியலின் மேம்பாட்டுக்காக ரூ.900 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுவும் சரியாக பயன்படுத்தப்படவில்லை.
தற்போது இதனால் 90,00,000 அரசு பள்ளி மாணவ-மாணவியரின் கணினிக்கல்வி பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 50,000-க்கும் மேற்பட்ட கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதுகுறித்து வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்த மாநில இணை ஆசிரியர் ஜி.ராஜ்குமார் பேசும்போது ''எங்களுக்கு தனியார் பள்ளிகளிலும் வேலை கிடைப்பது இல்லை. கிடைக்கும் வேலைக்கு சரியான ஊதியம் கிடைப்பது இல்லை.'' என்றார்.
மேலும் ''நாங்கள் இதுகுறித்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் பலமுறை மனு அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அதேபோல் ''ஒவ்வொரு வருடமும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படுகிறது. ஆனால் கணினி ஆசிரியர்களுக்கு எந்த நலத்திட்டமும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கணினி ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கிறோம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.