மெல்லிய பனி மூட்டம்.. புகைக்கு மத்தியில் நிலா.. நிலாவில் "பாபா".. குன்னூரில் ஒரே பரபரப்பு!
நிலாவில் பாபா முகம் தெரிந்ததாக வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
குன்னூர்: நிலாவில் பாபா முகம் தெரிவதாக வந்த செய்தியால் குன்னூர் நகரமே பரபரப்பாகி போனது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நிலாவில் பாபாவின் முகம் தெரிவதாக, பாபா நம்மை பார்க்கிறார் எனவும் தகவல்கள் வெளியானது. இதனால் குன்னூர் பகுதி மக்கள் அனைவரும் ஆர்வமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
குறிப்பாக, நகரின் முக்கிய பகுதியான காமராஜர்புரம், ரெய்லி காம்பவுண்டு, ராக்பி, மாடளம் உள்ளிட்ட குன்னூரின் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த தகவல் காட்டுத் தீ போல் பரவியது. அதனால் 9 மணி அளவில் இப்பகுதி மக்கள் அனைவரும் வீட்டை வெளியே வந்தனர். பலர் கைகளில் டெலஸ்கோப் இருந்தது. நிலாவையே பார்த்து கொண்டிருந்தனர். ஒரு சிலர் பிரத்தியேக கண்ணாடி அணிந்தும் நிலாவை பார்த்தனர். அப்போது அவர்களில் சிலர், "ஆமாம்.. பாபா முகம் தெரிகிறது" என கூறி பரவசப்பட்டனர். ஒருசிலர் நிலாவை பார்த்து வணங்கவே ஆரம்பித்துவிட்டனர்.
பின்னர் நிலாவில் பாபா தெரிவது குறித்து குன்னூரில் வேறு பகுதியில் வசித்து வரும் மக்களிடம் கேட்டோம். அப்போது, "அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. குன்னூர்-கோத்தகிரி சாலை செல்லும் வழி இளித்தரை என்ற இடம் உள்ளது. அங்கே ஒரு சாய்பாபா கோயில் உள்ளது. அந்த கோயிலுக்கு வந்தவர்களில் யாரோ கிளப்பிய புரளி இது. பாபாவை கண்ணால் பார்த்தோம் என்பது சொல்வதெல்லாம் சுத்த பிரமை... அப்படி ஒரு விஷயமே எப்போதும் நடக்காது" என்று விளக்கம் அளித்தனர்.
நிலாவில் சாய்பாபா தெரியும் பரபரப்பு சம்பவம் சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. அதற்கு பின்னர் நிலாவையே காணவில்லை. மேகத்துக்குள் ஓடி மறைந்துவிட்டது.உண்மையிலேயே நிலாவில் பாபா முகம் தெரிந்ததா? தெரியவில்லையா? அந்த "நிலாவுக்கே வெளிச்சம்"!