ஜிஎஸ்டி வரி நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிவகை செய்யுமாம்.. சொல்கிறார் பாபா ராம்தேவ்
சென்னை: சரக்கு மற்றும் சேவை வரி நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிவகை செய்யும் என யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
யோகா குரு பாபா ராம்தேவ் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் யோகா பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறார். இதனால் உலகம் முழுக்க பிரபலமானவர்.
ஆன்மீகம் மட்டுமின்றி பல்வேறு வகையான இயற்கையான மூலிகை தயாரிப்புகளை விற்பனை செய்யும் பதஞ்சலி நிறுவனத்தையும் பாபா ராம்தேவ் நடத்தி வருகிறார். மேலும் பாஜகவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருபவர்.
இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு மும்பைக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு கொண்டு வந்துள்ள சரக்கு, சேவை வரி நல்ல முயற்சியாகும் என்று கூறினார்.
மேலும் இரண்டாம் பொருளாதார சீர்திருத்தத்துக்கும், நம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் ஜிஎஸ்டி வழிவகை செய்யும். அனைத்து வரி விதிப்புகளும் ஒரே வரியில் கொண்டு வரப்பட்டு உள்ளது. சித்தா உள்பட மூலிகை மருத்துவம் சம்பந்தப்பட்டவைகள் வளர்ச்சி அடையும். காந்தியின் கனவான சுதேசி பொருட்கள் விற்பனையும் அதிகரிக்கும் என்றார்.