பாபர் மசூதி இடிப்பு நினைவு தினம் : உச்சக்கட்ட பாதுகாப்பு சென்னையில் ஆர்பாட்டம், கோவையில் மறியல்
அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் இன்று அனுசரிக்கப்படுவதால் தமிழகம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை: அயோத்தியில் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டு 26வது ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை கோவையில் ஆர்பாட்டம்,மறியல் போராட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு டிசம்பர் 6ம்தேதியும் பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரியும், இடித்தவர்களை கைது செய்து சிறையில் அடைக்க கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். கோவையில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பாபர் மசூதி இடிப்பின் 26 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுப்பதற்காக சென்னையிலுள்ள சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையம், துறைமுகம், கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய, மாநில பாதுகாப்பு ஏஜென்சியினர், புலனாய்வுத் துறையினர் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சபரிமலைக்கு தீவிரவாதிகள் மிரட்டல் உள்ளதால் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மத்திய கமாண்டோ போலீசார் 100 சபரிமலையில் முக்கிய இடங்களில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர். சபரிமலை 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும் முதல் முறையாக இந்த ஆண்டு சபரிமலையில் ஹெலிகாப்டர் மூலமும் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சபரிமலை வரும் பக்தர்களும் தீவிர சோதனைக்கு பிறகே 18ஆம் படி ஏற அனுமதிக்கப்படுகிறார்கள்.