மூன்று மாதமேயான குட்டி யானை...குழிக்குள் விழுந்த பரிதாபம் - வீடியோ
கிருஷ்ணகிரி, தளிப் பகுதியில் மூன்று மாதமேயான குட்டியானை தவறி குழிக்குள் விழுந்துவிட்டது.அதனை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு காட்டுக்குள் அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தளியை ஒட்டிய காட்டுப் பகுதியில், ஒரு பாறைக் குழியில் மூன்றுமாத யானை குட்டி விழுந்தது. மேலே வரமுடியாமல் தவித்த யானைக்குட்டியை வனத்துறையினர் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.
தமிழ்நாட்டில்கடந்த 140 வருடங்களில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவி வருகிறது. வறட்சியால் மனிதர்கள் அவஸ்தைப்படுவதைப்போல் காட்டில் வாழும் விலங்குகளும் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றன. காட்டில் உள்ள நீரோடை, சிற்றாறுகளில் நீர் வற்றிவிட்டதால், குடிநீருக்காக அனைத்து விலங்குகளும் அலைந்து வருகின்றன.
அப்படி குடிநீர்த் தேடி அலையும்போது வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் வருகின்றன. அப்படி வரும் விலங்குகள் தெரியாமல் ஆங்காங்கேயிருக்கும் குழிக்குள் விழுந்துவிடுகின்றன.
சிலநாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி காட்டுப் பகுதியில் காட்டுப் பன்றிகள் நீர் இல்லாத கிணற்றில் விழுந்துவிட்டன. பின்பு வனத்துறையினர் அவற்றை மீட்டு காட்டுக்குள் விட்டனர். இம்மாதிரியான சமயங்களில் விலங்குகள் மரித்துவிடுவதும் உண்டு.
அதேபோல், நேற்று தளியைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதியில், வனத்தை விட்டு வெளியேறி வந்த மூன்றுமாத யானைக் குட்டி பாறைக் குழிக்குள் விழுந்துவிட்டது. அதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் யானைக்குட்டியை பத்திரமாக மீட்டு, மீண்டும் காட்டுக்குள் அனுப்பி வைத்தனர்.