நாட்டுப் பசுமாட்டுக்கு ஆசையுடன் வளைகாப்பு நடத்திய பசுநேசர்!
தன் வீட்டில் வளர்த்த நாட்டு பசுமாட்டுக்கு வளைகாப்பு நடத்தி கிஷோர் என்பவர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கோவை: கோவையில் விவசாயி ஒருவர் பசுமாட்டுக்கு வளைகாப்பு நடத்தி விருந்து கொடுத்த நிகழ்ச்சி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
கோவை தொண்டாமுத்தூரை அடுத்துள்ள தாளியூரைச் சேர்ந்தவர் கிஷோர்குமார். அவர் பல ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். மேலும், நாட்டு மாடுகளையும் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் தன் மகள் பிறப்புதற்கு சில நாட்களுக்கு முன்பு பிறந்த பசு மாட்டுக்கு துர்கா என பெயரிட்டு குடும்பத்தில் ஒருவர் போல் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் துர்கா கர்ப்பமடைந்ததைத் தொடர்ந்து அதற்கு வளைகாப்பு நடத்த வேண்டுமென விரும்பியுள்ளார்.
அதையடுத்து, தம்மைப் போல் இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் 50 பேரை வரவழைத்து அவர்கள் முன்னிலையில் துர்காவுக்கு 19 சீர்வரிசைத் தட்டுக்களுடன் வெகு விமரிசையாக வளைகாப்பு நடத்தியுள்ளார்.
வந்திருந்த அனைவருக்கும் 5 வகை சாப்பாடு அளித்து விருந்தும் நடைபெற்றுள்ளது. பசுமாட்டுக்கு வளைகாப்பா? என அக்கம்பக்கத்தினர் ஆச்சர்யத்தில் உள்ளனர்.