நாடக நடிகர் அவதாரமெடுத்த 'தேர்தல் மன்னன்' பத்மராஜன்.. நடிகர் சங்கத் தேர்தலிலும் போட்டி
புதுச்சேரி: செப்டம்பர் 18 ல் நடக்கவுள்ள நடிகர் சங்கத்தேர்தலில் சரத்குமார், நாசரை எதிர்த்து போட்டியிடப்போவதாக தேர்தல் மன்னன் பத்மராஜன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி. கண்ணனின் பதவிக் காலம் வரும் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய மாநிலளங்களவை எம்.பி.யை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதற்கான வேட்புமனுத் தாக்கல், நேற்று புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள கமிட்டி அறையில் தொடங்கியது.
இந்நிலையில் இந்த தேர்தலுக்கான முதல் வேட்புமனுவாக தேர்தல் மன்னனான பத்மராஜன் தனது மனுவைத் தாக்கல் செய்தார். சேலம் மேட்டூரைச் சேர்ந்த பத்மராஜன், தேர்தல் நடத்தும் அதிகாரி மோகன்தாசிடம் வேட்புமனு பெற்று, அங்கேயே அமர்ந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.
இதையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், "தேர்தலில் போட்டியிடுவதில் எனக்கு விருப்பம் உண்டு. இத்துடன் 171 தேர்தல்களில் மனு தாக்கல் செய்துள்ளேன். வாஜ்பாய், நரசிம்மராவ், ஜெயலலிதா, தொடங்கி மோடி வரை பலருக்கு எதிராக தேர்தலில் மனு தாக்கல் செய்துள்ளேன்.
புதுச்சேரியில் இத்துடன் 5 வது முறையாக எம்.பி. தேர்தலில் மனு தாக்கல் செய்தேன். வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், நான் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளேன். இதன்மூலம் அதிகமுறை வேட்புமனுத்தாக்கல் செய்து கின்னஸ் சாதனை செய்வதே எனது லட்சியம்'' என்று தெரிவித்தார்.
பல்வேறு பிரச்சினைகளுக்குப் பின்னர் ஒருவழியாக நடிகர் சங்க தேர்தல் வரும் 18 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சரத்குமார், விஷால் அணியினர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் பலப்பரீட்சை நடத்தும் நிலையில், தேர்தல் மன்னன் பத்மராஜன் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது, நடிகர் சங்க தேர்தலை கலகலப்பாக்கி உள்ளது.
பத்மராஜனுக்கு நாடக நடிகர் என்ற அடிப்படையில் உறுப்பினர் கார்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே அவர் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளதாக தெரிகிறது.