தேர்தல் வரும்போது விவசாயிகள் நாட்டின் முதுகெலும்புகள்.. பிறகு அடிமைகள்.. அய்யாக்கண்ணு காட்டம்
தேர்தல் வரும்போதுதான் விவசாயிகள் நாட்டின் முதுகெலும்புகள் என அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.
Recommended Video
நீலகிரி: அரசியல்வாதிகளுக்கு தேர்தல் வரும்போது விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பாகவும், தேர்தல் முடிந்துவிட்டால், அவர்கள் இந்த நாட்டின் அடிமைகளாகவும் தெரிவார்கள் என்று அய்யாக்கண்ணு காட்டமாக தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு விலைநிர்ணயம் செய்யக்கோரியும், நிலுவை தொகையை வழங்கக் கோரியும் குன்னூர் தேயிலை வாரியம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை ஏற்றார். படுக தேச கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மஞ்சை மோகன் முன்னிலையில் ஏராளமானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து தகவலறிந்து களத்துக்கு வந்த தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் பால்ராசு ஆர்ப்பாட்டக்கார்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 2 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியில் வரும் 15-ம் தேதிக்குள் நிலுவைத் தொகை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதன்பேரில், ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின்போது, அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தேர்தல் வரும்போது விவசாயிகள் நாட்டின் முதுகெலும்புகள். தேர்தல் முடிந்துவிட்டால், அவர்கள் இந்த நாட்டின் அடிமைகளாவர். விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்க மறுக்கின்றனர். பசுந்தேயிலைக்கு விலையாக ரூ.50 கொடுக்கலாம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும்போது கூட்டுறவு சங்கத்தில் லாபம் கிடைத்தது. ஊட்டி தேயிலை என்று விற்பனை செய்தார்கள்.
நான்கு கிலோவிற்கு ரூ. 120 ஆகிறது. அத்துடன் ரூ. 50-ஐ சேர்த்து ரூ. 200-க்கு விற்பனை செய்யலாம். இதனால், பொதுமக்களும், தேயிலை விவசாயிகளும் பயன்பெறலாம். தேயிலை விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும். படுக இன மக்கள் செய்யும் தேயிலை தொழில் அழிவின் விளிம்பில் உள்ளது. படுக மக்களை எஸ்.டி., பிரிவில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அய்யாக்கண்ணு தெரிவித்தார்.