பொய் புகாரில் கைது செய்யப்பட்ட தலித் எழுத்தாளர் துரை குணாவுக்கு ஜாமீன்
மதுரை: போலீசாரே பொய்யான புகாரை தயாரித்து கைது செய்து சிறையிலடைத்த தலித் எழுத்தாளர் துரை குணாவுக்கு சென்னை உயர்நீமன்றத்தின் மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.
சிவானந்தம் என்பவர் மதுரை கரம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாக கூறி துரை குணா, அவரது நண்பர் பூபதி கார்த்திகேயன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் சிவானந்தமோ, போலீசார் தம்மிடம் வெற்றுத் தாள் ஒன்றில் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றனர்; தாம் புகாரே கொடுக்கவில்லை என பத்திரிகையாளர்களை அழைத்து உண்மையைப் போட்டுடைத்தார்.
பொய்ப்புகார்
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. உயர்ஜாதி உள்ளூர் போலீஸ் அதிகாரியின் செயல்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்தனர் என்பதற்காக பழிவாங்கும் நடவடிக்கையாகவே துரை குணாவும் அவரது நண்பர் கார்த்திகேயனும் பொய்ப் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர் என்பதும் அம்பலமானது.
குணா விடுதலைக்காக குரல்
இதையடுத்து துரை குணாவை விடுதலை செய்யக் கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனலும் துரை குணா விடுதலைக்காக குரல் கொடுத்தது.
ஆம்னஸ்டி கோரிக்கை
அந்த அமைப்பின் நிர்வாகி மேக்பீஸ் சிட்லோ வெளியிட்ட அறிக்கையில், பொய்யான புகாரில் கைது செய்யப்பட்ட தலித் எழுத்தாளர் துரை குணா, தலித் செயற்பாட்டாளர் பூபதி கார்த்திகேயன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்டு அவர்களை உடனடியாக காவல்துறை விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் புகார் கொடுத்ததாக கூறப்பட்ட சிவானந்தமே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு அவசர மனுவைத் தாக்கல் செய்தார்.
கிடைத்தது
ஜாமீன் தாம் கொடுக்காத புகாரின் பேரில்தான் துரை குணா, கார்த்திகேயன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் சிவானந்தம் கூறியிருந்தார். இம்மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை துரை குணா, கார்த்திகேயன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.