தமிழகம் முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம் - சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். ஆடுகளை பலியிட்டு இறைச்சியை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.
சென்னை: தியாகத்திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் வழிபாட்டுத்தலங்களில் இன்று அதிகாலை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பக்ரீத் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா உள்ளிட்ட பல்வேறு மசூதிகளில் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். ஆடுகளை பலியிட்டு இறைச்சியை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.
பக்ரீத் பண்டிகை தொழுகை
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆறு இடங்களில் பெருநாள் தொழுகை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கடையநல்லூரை சார்ந்த இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்,சிறுமியர்களும் குளித்து விட்டு அதிகாலை 6 மணிமுதலே காயிதேமில்லத் திடலில் குவிந்தனர். சரியாக 6.30 மணியளவில் பெருநாள் தொழுகையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மை குழு தலைவர் அப்துன்நாசிர் நடத்தினார் அதை தொடர்ந்து அவர் மக்களுக்கு ஆற்றிய உரையில் இறை நம்பிக்கை மனிதனை நல்லவனாக ஆக்குவதற்கு உதவியாக இருக்கின்றது.
இறைவனுக்கு பலி கொடுத்தல்
இறை தூதர்கள் உலகில் இறைவனுடைய இறை பணிகளை நடைமுறை படுத்துவதற்காகவே இறைவன் அனுப்பினான் இதில் முக்கிய பங்கு ஆற்றியவர்களில் இப்றாகீம் நபி அவர்கள் அவர் தன் மகன் இஸ்மாயிலை இறைவனுக்காக அறுத்து பலியிட முயன்ற போது இறைவனுக்கு மனிதர்களை நரபலி கொடுப்பது கூடாது என்பதற்காக அதற்கு பரிகாரமாக இஸ்லாமியர்கள் ஆடு,மாடு, ஒட்டகம் போன்ற பலி பிராணிகளை அறுத்து இறைவனுக்காக பலியிடுகின்றார்கள் என்றார்.
பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுன் கிளைசார்பில் செய்தனர் இந்த தொழுகையில் கிளை நிர்வாகிகள் ஜப்பார், துராப்ஷா, அப்துல்காதர் , அய்யூப்கான்மற்றும் பஜார் கிளை தலைவர் குறிச்சி சுலைமான், மதினாநகர் கிளை தலைவர் மைதீன், மற்றும் தொண்டரணியினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
சிறப்பான ஏற்பாடுகள்
இது போல பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் தவ்ஹீத் திடலில் மாவட்ட செயலாளர் முஹம்மது தாஹாவும், ரஹ்மானியாபுரம் 3 வது தெரு மர்யம் பள்ளி திடலில் மாவட்டபேச்சாளர் அப்துல் அஜீஸ் 9வது தெரு தவ்ஹீத் திடலில் காராஸ் மைதீன், மக்கா நகர் அல் ஹிதாயா திடலில் அப்துல் அப்துல் ஸலாமும், இக்பால் நகர் தெப்பதிடலில் அஜீஸ் ஆகிய ஆறு இடங்களில் நடை பெற்ற பெருநாள் தொழுகையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர் தாசில்தார் தங்கராஜ் மேற்பார்வையில் புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர் கோவிந்தன்,உதவி ஆய்வாளர் பரிமளா ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
குர்பானி கொடுத்து கொண்டாட்டம்
தொழுகைக்கு பிறகு கடையநல்லூர் பகுதியில் ஆயிரக்கானக்கான ஆடுகளும், மாடுகளும் அறுத்து பலியிட்டு அதன் இறைச்சியை ஏழைகளுக்கு வீடு தேடி வினியோகம் செய்தனர். பக்ரீத் பண்கையையொட்டி நெல்லை சங்கரன்கோவில் சுற்றுவட்டார சந்தைகளில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. சங்கரன்கோவில், பாம்புகோவில், திருவேங்கடம் சந்தைகளில் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.