ஜெயலலிதாவுக்கு சிறப்பு படை பாதுகாப்பு கோரிய மனு: ஹைகோர்ட் தள்ளுபடி
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிறப்பு படை பாதுகாப்பு கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் பாலாஜி பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கூறியுள்ளதாவது:
"தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதால், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தற்போது தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியாகாந்திக்கு வழங்கப்படுவது போன்று சிறப்பு படை வீரர்கள் மூலம் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பிற்பகல் 3 மணிக்கு உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
மேலும் மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன், தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆகியோர் ஆஜராகி இந்த வழக்கு குறித்து மத்திய, மாநில அரசின் கருத்துகளை கேட்டு உடனே தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
பிற்பகல் விசாரணைக்கு வந்தபோது, உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, முதல்வர் ஜெயலலிதாவுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு படை பாதுகாப்பு பற்றி மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
இதையடுத்து சிறப்பு படை பாதுகாப்பு கோரி பாலாஜி தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.