தமிழ் இலக்கிய நெஞ்சங்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த பாலகுமாரன்!
மறைந்த பாலகுமாரன் தன்னுடைய 40 வருடங்களில் 300 புத்தகங்களை எழுதியவர்.
சென்னை: உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழின் பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரை பற்றிய ஒரு சிறு குறிப்பு இதோ:
மறைந்த பாலகுமாரனின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பழமார்நேரி என்னும் சிற்றூர் ஆகும். தமிழாசிரியருக்கு மகனாக பிறந்த பாலகுமாரன் 11-ம் வகுப்பு வரையே கல்வி பயின்றார்.
தட்டச்சும், சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனம் ஒன்றில் 1969-ம் ஆண்டு பணியாற்ற தொடங்கினார். தன்னுடைய 20 வயது முதலே கவிதைகளையும் எழுத தொடங்கினார். அவற்றில் சில கணையாழி இதழிலும் வெளிவந்தன.
20-வயதில் கவிஞரானார்
மறைந்த பாலகுமாரனின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பழமார்நேரி என்னும் சிற்றூர் ஆகும். தமிழாசிரியருக்கு மகனாக பிறந்த பாலகுமாரன் 11-ம் வகுப்பு வரையே கல்வி பயின்றார். தட்டச்சும், சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனம் ஒன்றில் 1969-ம் ஆண்டு பணியாற்ற தொடங்கினார். தன்னுடைய 20 வயது முதலே கவிதைகளையும் எழுத தொடங்கினார். அவற்றில் சில கணையாழி இதழிலும் வெளிவந்தன.
திரைத்துறையில் பாலகுமாரன்
பின்னர் டிராக்டர் கம்பெனி ஒன்றில் உயரதியாக வேலை பார்த்தார் பாலகுமாரன். ஆனால் திரைத்துறையில் பணியாற்றுவதற்காக ஆசைப்பட்டு அந்த வேலையை தூக்கியெறிந்தார். இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் குழுவில் மூன்று திரைப்படங்களிலும், கே.பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குனராக பணியாற்றினார். கமலஹாசனின் நாயகன், ரஜினியின் பாட்ஷா, டைரக்டர் ஷங்கரின் ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ் உள்ளிட்ட 23 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே.பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கவும் செய்தார்.
பிரபலமான படைப்புகள்
எழுத்துச்சித்தர் பாலகுமாரன் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும், சில கவிதைகள், கட்டுரைகளையும் எழுதி உள்ளார். மொத்தமாக 40 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது மெர்க்குரி பூக்கள், இரும்புக்குதிரை, உடையார், தாயுமானவன் ஆகிய நாவல்கள் புகழ்பெற்றவை. இவரது கவிதைகள் இதயம்பேசுகிறது, குங்குமம், சாவி, ஆனந்தவிகடன் உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.
சாகித்ய அகாடமி விருது
இரும்புக்குதிரை என்ற அவரது நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் பாலகுமாரன். கலைக்காக பாலகுமாரன் ஆற்றிய சேவைக்காக மாநில அரசு இவருக்கு கலைமாமணி வழங்கி கௌரவித்தது. அத்துடன் சுகஜீவனம் என்ற சிறுகதை தொகுப்புக்காக மாநில அரசின் விருதினையும், மெர்க்குரி பூக்கள் நாவலுக்காக இலக்கிய சிந்தனை விருதையும் பெற்றார். திரைத்துறையை பொறுத்தமட்டில், காதலன் திரைப்படத்துக்காக மாநில அரசின் சிறந்த வசனக்கர்த்தா விருதும் கிடைக்கப் பெற்றது.
பிரமாண்ட நாவல்
பாலகுமாரனின் எழுத்துலகில் முத்தாய்ப்பாக அமைந்தது, 'உடையார்' எனும் மிகப்பிரமாண்டமான நாவல்தான். இது, ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குறிப்பாக தஞ்சை பெரிய கோயில் கட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் கட்டப்பட்ட விதம் ஆகியவற்றையும் கதைக்களமாகக் கொண்டது. இதற்காக பாலகுமாரன் பல ஆண்டுகள் ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த நாவலில், தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று என்றும், அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிகப்பெரிய, துல்லியமான கற்றளி எழுப்பப்பட்ட விதம் அனைவருக்கும் ஆச்சர்யமளிக்கும் விஷயமாகும் என்பதையும் வலியுறுத்தியிருப்பார். இது ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுத்தந்தது.