பட்டாசுகளை ஆம்னி பஸ்களிலும் எடுத்துச் செல்ல தடை... மீறினால் உரிமம் ரத்து
சென்னை: தீபாவளி பண்டிகையின்போது ஆம்னி பஸ்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, ரெயில் மற்றும் பஸ்களில் வெடிபொருட்கள், மற்றும் பட்டாசு பார்சல்களை எடுத்துச் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்கள் இப்போதே பட்டாசு பாக்கெட்டுகளை வாங்கி குவித்து வருகிறார்கள்.
இதனை கருத்தில் கொண்டு ஆம்னி பஸ்களிலும் பட்டாசு பாக்கெட்டுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நேரங்களில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து தீவிபத்து ஏற்பட்டு விட்டால் பெரும் உயிர் சேதங்கள் ஏற்படும். எனவே இதனை ஆம்னி பஸ்களிலும் கடுமையாக நடைமுறைப்படுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும் போது ஆம்னி பஸ்களில் பட்டாசுகளை கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றனர்.
மேலும், ஆம்னி பஸ்களில் தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதை தடுக்கவும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..