மாடு விற்கத் தடை.. தமிழகத்தில் நாலே நாளில் 100 கோடி நஷ்டம்.. கொதிக்கும் மாட்டு வியாபாரிகள்
மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்திருப்பதால், நான்கு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மாட்டு வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
பொள்ளாட்சி: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு தரப்பில் இருந்து எந்தவித அறிவிப்பும் வரவில்லை என்றாலும் மதுரை, சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் சமூக இயக்கத்தினரும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலியான மாட்டுச் சந்தை
இந்தப் போராட்டங்கள் ஒருபுறத்தில் படுவேகமாக நடந்து கொண்டிருக்க, மாடு விற்பனைத் தடையால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தமிழக மாடு விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மாட்டுச் சந்தைகள் தொடர்ந்து காலியாக கிடப்பதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சியில் ரூ.6 கோடி இழப்பு
இதுகுறித்து பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் மாட்டு வியாபாரிகள் மாநிலச் சங்க செயலாளர் செல்வராஜ் பேசினார். அப்போது, மாடு விற்பனைக்கு தடை விதித்ததால் பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் மட்டும் ரூ.6 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று செல்வராஜ் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் 100 கோடி நஷ்டம்
மேலும், தமிழ்நாடு முழுவதும் மாட்டுச் சந்தைகளில் மாடுகள் விற்கப்படாததால் ரூ.100 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்று செல்வராஜ் கூறினார். இதனால் மாடு விற்பனையாளர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
வாபஸ்
மாட்டு வியாபாரம் மட்டுமல்லாமல் மாட்டிறைச்சி வியாபாரம் என மாடு தொடர்பான அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் நஷ்டத்தை வியாபாரிகளால் சமாளிக்க முடியவில்லை. இதனால் இந்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று மாட்டு வியாபாரிகள் கோரியுள்ளனர்.