மனிதனைக் கடித்து மாட்டை காப்பாற்றுகிறது பாஜக.. ஜூன் 1ல் போராட்டம்… வீரமணி அறிவிப்பு
மனிதனைக் கடித்து மாட்டை காப்பாற்றும் பாஜகவை கண்டித்து ஜூன் 1ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று திக தலைவர் கி. வீரமணி அறிவித்துள்ளார்.
சென்னை: பசு, காளை, எருமை, ஒட்டகங்களை உணவுக்காக பயன்படுத்தக் கூடாது என்னும் மத்திய பாஜக அரசின் மனித உரிமை விரோத, அரசமைப்பு சட்ட விரோத ஆணையை எதிர்த்து ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாட்டைக்கடித்து, ஆட்டைக்கடித்து, கடைசியில் மனிதனை கடித்தது என்ற ஒரு பழமொழி உண்டு. ஆனால் இப்பொழுது சற்று வித்தியாசப்படுத்தி மனிதனை கடித்து மாட்டைக் காப்பாற்றும் தலைகீழ் நிலைக்கு மத்தியில் உள்ள பி.ஜே.பி. தலைமையிலான அரசு நாட்டை கொண்டு செல்கிறது.
இந்துத்துவா கொள்கைத் திணிப்பு
மிருகவதை தடுப்பு என்ற பெயரால் மாட்டிறைச்சி உண்ணுவதை தடைசெய்யும் ஒரு சட்டத்தையும் மத்திய பிஜேபி அரசு கொண்டுவந்துள்ளது. நாடுமுழுவதும் கால்நடை சந்தைகளில் பசு, காளை, எருமை, ஒட்டகங்களை இறைச்சிக்காக கொல்லுவதற்கு விற்கக்கூடாது. விவசாயிகள் மட்டும்தான் சந்தைகளில் கால்நடைகளை விற்க முடியும்;
சட்டவிரோத அறிவிப்பு
சந்தைகளுக்கு கால்நடைகளை கொண்டுவருபவர்கள் அவற்றை இறைச்சிக்காக விற்கவில்லை என்பதற்கான உறுதிமொழி சான்றை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும். கால்நடைத்துறை அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற வேண்டும். இதன் மூலம் மத்தியில் உள்ள பிஜேபி அரசு தனது இந்துத்துவா கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்த முற்படுவது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோத செயல்பாடேயாகும்.
மாநில அரசின் கருத்து முக்கியம்
Cruelty to animals Act என்பது இந்திய அரசியல் சட்டத்தில் 7 ஆவது அட்டவணையில் பொதுப்பட்டியலில் (Concurrent Listc) 17 ஆவது அம்சமாக அரசியல் சட்ட கர்த்தாக்களால் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்படி மாநில அரசுகளுக்கும் இதுபற்றி முடிவெடுக்க, சட்டம் செய்ய உரிமையுள்ளது. மாநில ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அடிப்படையில்தான் என்பதும் இங்கு சுட்டிகாட்ட தகுந்ததாகும்.
அரசமைப்பு சட்டவிரோதம்
மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் உள்ள இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், தாழ்த்தப்படோர், இந்துக்களிலும் பெரும்பான்மையோர் விளையாட்டு, போட்டிகளில் ஈடுபடுவோர், இராணுவத் துறையினர், இப்படி பலருக்கும் மாட்டுக்கறி உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். இத்தகைய உணவு பழக்கத்தை - அடிப்படை ஜீவாதார உரிமையை மத்திய அரசின் புதிய சட்டம் மறுப்பதோடு அல்லாமல் அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமை தத்துவத்திற்கே விரோதமல்லவா!
நடைமுறை சாத்தியமா?
விற்பனை செய்யும்முன் அதற்குரிய அதிகாரிகளிடம் இது இறைச்சிக்காக விற்கப்படவில்லை என்று சான்றிதழ் ஆதாரம் பெற வேண்டுமென்றால், சந்தைக்கு வரும் விவசாயிகளுக்கு இது எவ்வகையில் நடைமுறை சாத்தியம்? இதில் லஞ்சம் ஊழல் நுழைந்துவிடாதா?
முக்கிய உணவு
தமிழ்நாடு, கேரளா, பிஜேபி ஆளும் கோவா மிகவும் குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களில் மாட்டுக்கறி மிக முக்கியமான அன்றாட உணவல்லவா!
ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் மக்கள் விரோத - அடிப்படை மனித உரிமை விரோத இத்தகைய செயலைக் கண்டித்து 01.06.2017 அன்று காலை 11.00 மணிக்கு சென்னையில் ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அறவழியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். 30.5.2017 மாலை சென்னை பெரியார் திடலில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெறும். மதசார்பின்மையில் நம்பிக்கை உள்ள - மனித உரிமையில் ஆர்வமுள்ள அனைத்துத் தரப்பினரும் ஓர் அணியில் இணைந்து நின்று மத்திய அரசின் காட்டு தர்பாரை முறியடிக்க வாரீர், வாரீர்! என்று அழைக்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.