ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள தடையை மதிக்க வேண்டும்: மேனகா காந்தி
சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை மதித்து நடக்க வேண்டும் என மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுவதை தடுப்பதற்கான கடத்தல் தடுப்பு வரைவு மசோதா குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்தை அறியும் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தலைமை தாங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் மேனகா காந்தி கூறியதாவது: பெரும்பாலானோர் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நானோ, பா.ஜ,கவோ அல்லது வேறு யாருமோ சொல்வதற்கு எதுவும் இல்லை. ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், உச்சநீதிமன்ற தீர்ப்பை நாம் மதித்து நடக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுப்பதை நோக்கமாக கொண்டுள்ள ஆள் கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு, மறுவாழ்வு) மசோதா-2016, நாடாளுமன்றத்தில் டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்னர் குழந்தைகள் கடத்தப்படுவதும், சீரழிக்கப்படுவதும் பெருமளவு குறைந்து விடும்.
இந்த மசோதா தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட வல்லுனர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், பயிற்சியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், சட்ட அமலாக்கல் முகமைகள், கருத்து ஆர்வலர்கள் ஆகியோர்களின் மதிப்புமிக்க கருத்துகளும் பரிசீலிக்கப்படும்.
குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதை தடுக்கும் விதத்தில் இ-பாக்ஸ் (மின்னணு பெட்டி) வைக்கும் புதிய முயற்சி, 26-ந் தேதி தொடங்கப்படும். இதன் மூலம் குழந்தைகளை, யாரும் தவறான எண்ணத்துடன் தொடுகிறபோது, அது குறித்து அந்த குழந்தை தனது கம்ப்யூட்டரில் உள்ள இ-பாக்சில் புகார் செய்யலாம். அந்த புகார் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும். அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக நடைபெறுகிற பாலியல் குற்றங்களை தடுக்கிற நோக்கத்தில், தேசிய அளவில் பாலியல் குற்றவாளிகள் பட்டியலை வெளியிடுவதற்கான வேலைகளை மத்திய உள்துறை அமைச்சகம் செய்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர், அது குறித்த பட்டியல் வெளியிடப்படும்.
ஆள்கடத்தலின் பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கிய சட்டம் எதுவும் தற்போது இல்லாத நிலையில், கடத்தப்படும் நபர்கள், தொடர்புடைய விவகாரங்களுக்கு எதிராக வலுவான சட்ட, பொருளாதார, சமூக சூழலை உருவாக்குவதுதான் இந்த சட்ட மசோதாவின் முக்கிய நோக்கம். மேலும் பெண்கள், குழந்தைகள் கடத்தலில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க இந்த மசோதா உதவும் என்று கூறினார்.