மாணவர்கள் மட்டுமல்ல... இனி, ஆசிரியர்களும் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தக் கூடாதாம்
புதுச்சேரி: பள்ளி வகுப்பறைகளில் செல்போனில் பேச ஆசிரியர்களுக்கு தடை விதித்து புதுவை கல்வி துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே, மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் செல்போன் பயன் படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடு நிலவி வரும் வேளையில், தற்போது ஆசிரியர்களுக்கும் அந்த உத்தரவு விரிவு படுத்தப் பட்டுள்ளது.
இது குறித்து புதுவை அரசின் கல்வி துறையில் இருந்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ‘பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் செல்போனை பயன்படுத்த கூடாது. அவர்கள் பள்ளிக்கு வந்தவுடன் தங்களுடைய செல்போனை தலைமை ஆசிரியர் அறையில் ஒப்படைத்துவிட வேண்டும். வகுப்பறையில் பள்ளி ஆசிரியர்கள் செல்போனை பயன்படுத்துகிறார்களா? என்பதனை சோதனையிட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு சோதனை நடத்தும்போது ஆசிரியர்கள் செல்போனில் பேசுவது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறப்பட்டுள்ளது.