உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க தடையில்லை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
சென்னை: உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்கள் பேனர்களில் இடம்பெற கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் பிறந்த நாள், திருமண நாள் தொடங்கி நினைவு நாள் வரையிலும், அரசியல் பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் என அனைத்துக்கும் பேனர் வைக்கும் கலாசாரம் மேலோங்கி உள்ளது. இதனால் திருலோச்சன சுந்தரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்று செய்து இருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் இனி தமிழகத்தில் எங்கும் உயிருடன் உள்ளவர்களுக்கு கட் அவுட் வைக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார். இதனால் கட் அவுட்களுக்கு தமிழ்நாட்டில் நிறைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை மாநகராட்சி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தற்போது தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
அந்த தீர்ப்பில் "பேனர்களில் உயிருடன் உள்ளவர்களின் படங்களை பயன்படுத்த தடை கிடையாது. ஆபாச படங்கள், கருத்துகள் பேனரில் இருக்ககூடாது என்று மட்டும்தான் சட்டத்தில் விதி உள்ளது. எனவே உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட் வைக்கலாம்'' என்று கூறி இருக்கிறது.