சீசனின் முதல் நாளில் சீறிய குற்றாலம் அருவிகள் இப்போது அமைதியில்... குளிக்க அனுமதி!
குற்றாலம்: குற்றாலம் சீசன் தொடங்கிய முதல் நாளே அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சீற்றம் குறைந்திருப்பதால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் வரை குற்றால சீசன் இருக்கும். சில ஆண்டுகளில் செப்டம்பர் மாதம் வரை சீசன் நீடிக்கும். இந்த சீசனை அனுபவிக்க வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிவார்கள்.
தற்போது ஒரு வார தாமதத்திற்குப் பின்னர் பருவ மழை தொடங்கியுள்ளது. இதையடுத்து நேற்று அருவிகளில் பலத்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
அதேசமயம், குற்றாலத்தில் பெய்து வரும் சாரல் மழையை சுற்றுலாப் பயணிகள் அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு நின்று நிதானமான அளவில் தண்ணீர் கொட்டி வருகிறது. இதையடுத்து இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் நிதானமான அளவில் கொட்டி வருகிறது. போதிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
திற்பரப்பில் தடை தொடர்கிறது:
அதேசமயம், கன்னியாகுமரி மாவட்டம் திறப்பரப்பு நீர்வீழ்ச்சியில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு நிலவுவதால் 2வது நாளாக இன்றும் அங்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.