பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க லாலாப் பேட்டையிலிருந்து ஏற்றுமதியாகும் வாழைத்தார்கள்!
லாலாப்பேட்டை: ஐயப்ப பக்தர்கள் பழனியில் குவிய தொடங்கி உள்ளதால் பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கு தேவையான வாழைத்தார்கள் லாலாப்பேட்டையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
வாழைப்பழத்திற்கு பெயர்போன ஊர் என்றால் லாலாப்பேட்டை. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் வாழை தரமானதாகவும், சுவையாகவும் இருப்பதால் நல்ல மவுசு எப்போதும் உண்டு.
லாலாப்பேட்டை பகுதிக்குட்பட்ட மாயனூர், கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி அதிகளவு நடந்து வருகிறது.
இப்பகுதிகளில் பூவன், ரஸ்தாலி, கற்பூரவள்ளி ஆகிய ரக வாழைகள் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக போதியளவு மழை இல்லாததால் வாழை சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை கைகொடுத்த நிலையில் காவிரி மற்றும் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் தொடர்ந்து வருவதால் வாழை சாகுபடி அதிகளவு நடந்து வருகிறது. ஆனாலும் கடந்த சில மாதங்களாக வாழைக்கு போதுமான விலை இல்லை என விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
கார்த்திகை மாதம் முதல் சித்திரை மாதம் வரை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து கொண்டு பக்தர்கள் பல ஆயிரம் பக்தர்கள் சென்று வருவர். ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வருவது வாடிக்கையாகும்.
மேலும் தை பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் வர உள்ளதால் பழனியில் பக்தர்கள் ஏராளனோர் கூடுவர். பழனி என்றாலே பஞ்சாமிர்தம் தான், பழனிக்கு வரும் பக்தர்களுக்கு அனைவருக்கும் பஞ்சாமிர்தம் தயாரித்து தர வேண்டி உள்ளது. பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கு வாழைப்பழம் தான் முக்கியமாகும். இந்த வாழைத்தார்கள் தற்போது லாலாப்பேட்டை மார்க்கெட்லிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
லாலாப்பேட்டை மார்க்கெட்டிற்கு வரும் வாழைதார்கள் சீப்பு சீப்பாக அறுக்கப்பட்டு அனுப்பட்டு வருகிறது. கற்பூரவள்ளி தார்கள் ஒரு கிலோ ரூபாய் 12க்கும், பூவன் ரக வாழைகள் ஒரு கிலோ ரூபாய் 6 க்கும் கொள்முதல் செய்யப்பட்டு பழனிக்கு கொண்டு செல்கின்றனர்.
ஐயப்பன் சீசன் முடியும் வரை லாலாப்பேட்டையிலிந்து பழனிக்கு பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கு வாழைத்தார்கள் ஏற்றுமதி செய்யப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.