பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக போர்க்கொடி.. அவிநாசியில் இன்று முழு கடையடைப்பு
பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் அவிநாசியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது
அவிநாசி: தமிழக அரசின் புதிய பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் அவிநாசியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது
கடந்த 20ம்தேதி திடீரென பேருந்து கட்டணத்தை இரவோடு இரவாக தமிழக அரசு உயர்த்தியது. இதனால் ஏழை எளிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரசின் இந்த முடிவை எதிர்த்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல இடங்களில் மாணவர்கள் தொடர் போராட்டத்திலும், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
சமூக அமைப்புகள் சார்பாக இந்த கடையடைப்பு நடைபெற்று வருகிறது. காலை 6மணிக்கு தொடங்கப்பட்ட இந்த கடையடைப்பு மாலை 6 மணி வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சிறு வியாபாரிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் என்று ஏராளமானோர் வசிக்கும் அவிநாசியில் அரசுக்கு எதிராக முதல் எதிர்ப்பு குரல் கிளம்பியுள்ளது. விரைவில் இவ்வாறு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும், நகரங்களிலும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் அவிநாசியில் உள்ள சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.