இயல்பு வாழ்க்கையைப் சற்றே புரட்டிப் போட்ட “பந்த்” – தமிழகம் முழுவதும் மூடப்பட்ட கடைகள்!
சென்னை: கர்நாடக அரசின் காவிரியில் அணை கட்டும் முயற்சியினைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் முழுமையாக இருந்தது.
தமிழக டெல்டா விவசாயிகளின் சார்பில் நடத்தப்படும் போராட்டம் என்பதால் ஆளும்கட்சியினரும் இதற்கு மறைமுக ஒத்துழைப்பு நல்கியுள்ளனர்.
இதனால், தமிழகம் முழுவதும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டு வருகின்றது.
பேருந்துகள், ரயில் மறியல் போராட்டம்:
பேருந்துகள், ரயில்கள் வழக்கம்போல இயங்கிய போதிலும் பேருந்துகள் நிறுத்தப் போராட்டம் ஆகியவையும் நடைபெற்றன. சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது.
காவிரியில் மேகதேதாட்டு அணை:
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதேதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் 2 புதிய அணைகளை கட்டும் பூர்வாங்க பணியை கர்நாடக அரசு தொடங்கி உள்ளது. இதற்காக அந்த மாநில அரசு 2015-16 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூபாய் 25 கோடி ஒதுக்கி உள்ளது.
தண்ணீரே தருவதில்லை கர்நாடகா:
கர்நாடக அரசு ஏற்கனவே, காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தண்ணீர் விடுவது இல்லை. இந்த 2 அணைகளும் கட்டப்பட்டால் 48 டி.எம்.சி தண்ணீர் தேக்கப்படும். இதனால் காவிரியில் தண்ணீர் வருவது கேள்விக் குறியாகும்.
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் வழக்கு:
காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. இதை கருத்தில் கொண்டு அணைகட்டும் கர்நாடக அரசுக்கு தடை விதிக்ககோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது.
ஒருநாள் கடையடைப்பு போராட்டம்:
இந்த நிலையில், தமிழக மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர்.
அனைத்துக் கட்சிகளும் ஆதரவு:
இந்த போராட்டத்துக்கு, தி.மு.க., காங்கிரஸ், கம்யூ னிஸ்டுகள் உள்பட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தன. தமிழக சட்டசபையில் கர்நாடக அரசை கண்டித்து நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போராட்டத்துக்கு அனைவரும் ஆதரவு அளிக்கும் வகையில் சட்டசபை கூட்டமும் இன்று ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக “பூட்டு”:
தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை ஆதரவு அளித்தன. எனவே இன்று மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான கடைகள் ஒட்டு மொத்தமாக அடைக்கப்பட்டு இருந்தன. அனைத்து ஊர்களிலும் கடை அடைப்பு போராட்டத்துக்கு முழுமையான ஆதரவு இருந்தது.
லாரிகளும் ஓடவில்லை:
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள், டிப்பர் லாரி மற்றும் மண் அள்ளும் எந்திரங்களும் ஆதரவு அறிவித்துள்ளதால் லாரிகள் ஓட வில்லை. டிப்பர் லாரிகள் மற்றும் மண் அள்ளும் எந்திரங்களும் இயங்கவில்லை.
சிறிய கடைகள் மட்டுமே திறப்பு:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கடை அடைப்பு முழுமையாக நடந்தது. மருந்துகடை, ஒருசில சிறிய கடைகள் தவிர அனைத்துக்கடைகளும் மூடி இருந்தன.
பழக்கடைகள், பூக்கடைகள் திறப்பு:
கோயம்பேட்டில் இன்று காய்கறி கடைகள் அனைத்தும் திறந்திருந்தது. இதேபோல் பழக்கடைகள், பூக்கடைகளும் திறந்திருந்தன. முன்கூட்டியே கலந்தாலோசித்து அறிவிப்பு கொடுக்காததால் கடைகள் திறக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
குறைந்துபோன மக்கள் கூட்டம்:
ஆனால் தக்காளி கடைகள் மட்டும் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தது. பஸ்கள், ரயில்கள் வழக்கம் போல ஓடின. என்றாலும் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தன.
ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்பு:
தனியார், அரசு பஸ்கள், ரயில்கள் ஆங்காங்கே மறிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்படும் என்று போராட்டக்குழுவினர் கூறியுள்ளதால் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் காவலர்களை ஈடுபடுத்தி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கர்நாடகாவிற்கு ”நோ” பேருந்து:
தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும் கர்நாடகாவில் இருந்தும் தமிழகத்துக்கு அரசு பேருந்துகள் வரவில்லை.