4 மாணவிகள் தற்கொலை- ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பணப்பாக்கத்தில் கடையடைப்பு போராட்டம்
மாணவிகள் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூர் பணப்பாக்கத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்துவருகிறது.
வேலூர் : மாணவிகள் நான்கு பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி வேலூர் பணப்பாக்கத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
வேலூர் மாவட்டம் பணப்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவிகள் மோனிஷா, தீபா, ரேவதி, சங்கரி ஆகியோர் நேற்று பள்ளிக்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். பருவத் தேர்வில் மாணவிகள் சரியாக மதிப்பெண் எடுக்காததால் ஆசிரியர்கள் திட்டியது தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.
ஆசிரியர்கள் திட்டியதில் மனமுடைந்த மோனிஷா, தீபா, சங்கரி, ரேவதி உள்ளிட்ட ஆறு மாணவிகள் தற்கொலை செய்துகொள்ள கிணற்றிற்கு சென்று இருக்கிறார்கள். நான்கு பேர் குதித்த நிலையில்,பயந்து போன எஞ்சிய இரண்டு மாணவிகள் ஊர்காரர்களை அழைத்து வந்து இருக்கிறார்கள்.
அதற்குள் கிணற்றில் குதித்த நான்கு மாணவிகளும் உயிரிழந்துள்ளனர். மாணவிகள் மரணம் குறித்து விசாரிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனையடுத்து, மாணவிகள் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பணப்பாக்கத்தில் இன்று கடையடைப்பு நடந்து வருகிறது.