முழு அடைப்பு: தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் எதுவுமே ஓடவில்லை!
விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் எதுவுமே இயங்கவில்லை.
சென்னை: விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள் எதுவுமே இயங்கவில்லை.
வறட்சி நிவாரணம், விவசாயக் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் கடந்த 41 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் மத்திய அரசு தொடர்ந்து மௌனம் சாதித்து வந்தது.
இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில் திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இரண்டு முறை கூட்டப்பட்டது. அதில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை நிர்பந்திப்பது, நீட் தேர்வில் இருந்து விலக்கு கோருவது , மாநிலம் முழுவதும் மதுவிலக்கு, அடிப்படை வசதிகள், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்துவது, நெல், கரும்பு ஆகியவற்றுக்கு நியாயமான விலை நிர்ணயிக்க கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வேலைநிறுத்த போராட்டம்...
மேலும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
முதல்வர் சந்திப்பு
இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்ற போது விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கைகளை தாம் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் உறுதி அளித்தார். இதனை ஏற்று விவசாயிகள் தமிழகம் திரும்பினர்.
தமிழகம் முழுவதும் பந்த்
இன்று காலை 6 மணிக்கு வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறா வண்ணம் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
வாகன போக்குவரத்து
போராட்டத்தை முன்னிட்டு லாரிகள், தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் எதுவுமே இயங்கவில்லை. சாலையில் போக்குவரத்து மிகவும் குறைவாக இருப்பதால் இரு சக்கர் வாகன ஓட்டிகள் மட்டுமே சாலைகளில் செல்வதை காண முடிகிறது.