பெங்களூர் ஏடிஎம் கொள்ளையன் தமிழகத்தில் பதுங்கலா? காவல்துறை தீவிர விசாரணை
சென்னை: பெங்களூர் ஏடிஎம்மில் பெண்ணை தாக்கி பணத்தை கொள்ளையடித்த கொள்ளையன் தமிழகத்தில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து கர்நாடக காவல்துறையினர் தமிழகத்துக்கு வந்துள்ளனர்.
பெங்களூருவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏடிஎம் மையத்துக்கு வந்த வங்கி அதிகாரியான உதயா என்ற பெண்ணை கொடூரமாகத் தாக்கி பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு தப்பிய கொள்ளையன் தமிழகத்தில் பதுங்கியுள்ளதாக கர்நாடக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கார்நாடக காவல்துறையினர், சென்னை, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம், குற்றவாளியின் புகைப்படத்தைக் காண்பித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து தமிழக காவல்துறைக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொள்ளையன் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.