பொதுக்குழு கண்டிப்பாக நடைபெறும் சொல்கிறார் அன்வர் ராஜா
பொதுக்குழு கண்டிப்பாக நடைபெறும் என்றும் பெங்களூருவில் விதிக்கப்பட்ட தடை செல்லாது என்றும் முதல்வர் அணியைச் சேர்ந்த அன்வர் ராஜா கூறியுள்ளார்.
சென்னை: திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும் என்றும் இது அஇஅதிமுக பொதுக்குழு இல்லை என்றும் அதிமுக அம்மா அணி,அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்தவர்கள் நடத்தும் பொதுக்குழு என்றும் அன்வர்ராஜா எம்.பி கூறியுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்ததைத் தொடர்ந்து செயற்குழு பொதுக்குழு செப்டம்பர் 12 ஆம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனவும், எடப்பாடி தரப்பினர் கூட்டவுள்ளது போலிப் பொதுக்குழு எனவும், கூட்டத்திற்கு செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டார் தினகரன்.
இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி பெங்களூரு உரிமையியல் நீதிமன்றத்தில் அதிமுக கர்நாடகா மாநில செயலாளர் புகழேந்தி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு கூட்ட இடைக்கால தடை விதித்து வழக்கை அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த இடைக்கால தடை தங்களை கட்டுப்படுத்தாது என்று அன்வர் ராஜா எம்பி கூறியுள்ளார். நடப்பது அதிமுக பொதுக்குழு அல்ல என்றும் அதிமுக அம்மா அணி,அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்தவர்கள் நடத்தும் பொதுக்குழு என்றும் அன்வர்ராஜா எம்.பி கூறியுள்ளார்.