பங்காரு அடிகளாரை திடீரென நேரில் சந்தித்த டாக்டர் ராமதாஸ்... ஏன்?
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 75-வது பிறந்தநாள் பவள விழாவாக மேல்மருவத்தூரில் செவ்வாடை பக்தர்களால் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆனால் அதை விட முக்கியமாக பங்காரு அடிகளாரை யாரும் எதிர்பாராத வகையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேரில் சந்தித்து வாழ்த்து கூறியதுதான்.
பங்காரு அடிகளாரை இதுவரை கண்டு கொள்ளாமல் இருந்தவர் டாக்டர் ராமதாஸ். எனவே அவரே நேரில் வந்து சந்தித்தது அரசியல் ரீதியாகவும் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
கடந்த 28ஆம் தேதி தொடங்கிய பிறந்தநாள் விழாவின் முதல் நாள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்த ஆன்மிக ஜோதிகளுக்கு இயக்கத்தின் துணைத்தலைவர் கோ.ப.செந்தில்குமார் வரவேற்பு கொடுத்து அந்த ஜோதிகள் மூலம் கலச விளக்கு வேள்வி பூஜைகளை தொடங்கி வைத்தார்.
ரூ.10 கோடி நலத்திட்ட உதவிகள்
மார்ச் 1ஆம் தேதி சேலம், நாமக்கல் மாவட்ட பக்தர்கள் அடிகளாரை புதிய வெள்ளி ரதத்தில் அமர வைத்து சித்தர் பீடம் அழைத்து வந்தனர். அன்று மாலை ரூ.10 கோடி மதிப்பிலான மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழா மலர், குறுந்தகடும் வெளியிடப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் அனந்த்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.தணிகாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இலவச திருமணங்கள்
2ஆம்தேதி விழாவில் கடலூர், விழுப்புரம் மாவட்ட பக்தர்கள் அடிகளாரை தங்க ரதத்தில் அழைத்து வந்தனர். பின்னர் 25 ஏழை ஜோடிகளுக்கு அடிகளார் இலவச திருமணம் நடத்தி வைத்து, அவர்களுக்கு வீட்டு உபயோக பொருட்களை வழங்கினார். 50 ஏழை சுமங்கலி பெண்களுக்கு தங்கத்தாலிகள் வழங்கப்பட்டது.
அடிகளாருக்கு பாதபூஜை
பிறந்தநாளான நேற்று அடிகளாரின் அருள் தரிசனம் நடந்தது. சித்தர்பீடம் வந்தடைந்த அடிகளாருக்கு பக்தர்கள் பாதபூஜை செய்து வரவேற்றனர். பிரகாரம் வலம் வந்த அடிகளார் கருவறையிலும், புற்று மண்டபத்திலும் தீபாராதனை காண்பித்து வழிபட்டார். பின்னர் அங்கே வைக்கப்பட்டு இருந்த பிறந்த நாள் கேக்கை வெட்டி அங்கிருந்த குழந்தைகளுக்கு ஊட்டினார். பின்னர் அங்கே அமைக்கப்பட்டு இருந்த சிறப்பு அலங்கார மேடையில் பங்காரு அடிகளார் அமர்ந்தார். அடிகளாரிடம் ஆசி பெறுவதற்காக வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையாக காத்திருந்து ஆசிபெற்றனர்.
உலகம் முழுவதும் பிரபலம்
தற்போது மிகப் பெரிய வழிபாட்டுத் தலமாக, ஆன்மீக மையமாக மாறியுள்ள மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோவில் 1980களுக்கு முன்பு மிக மிக சாதாரணமாக இருந்தது. நடிகர் ராஜேஷ் -சரிதா நடிப்பில் இந்த ஆலயத்தை மையமாக வைத்து ஒரு திரைப்படம் வெளியானது. அதன்பின் இந்த ஆலயத்தின் புகழ் வேகமாக நாடெங்கிலும் பரவவே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து. இன்று தனி ரயில்நிலையம், கல்லூரிகள், சிறப்பு ரயில்கள், என பலதரப்பட்ட வகையிலும் இப்பகுதி பிரபலமடைந்ததோடு இந்த ஆலயத்திற்கு அனைத்துமானவராக ஆதிபராசக்தியின் உருவமாக மாறியுள்ளார் பங்காரு அடிகளார்.
லட்சக்கணக்கான பக்தர்கள்
முன்னாள் அரசு ஊழியரான இன்றைய பங்காரு அடிகளார் பெயரில் வழிபாட்டு மன்றங்கள், தமிழகத்தின் மட்டுமின்றி நாடெங்கிலும் உள்ள பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.
வாக்குவங்கியாக மாற்றமா?
பல்வறு மாநிலங்களில் இந்தக் கோவிலுக்கு கிளைகள் உள்ளன. கிட்டத்தட்ட ஒரு வாக்கு வங்கி போல இவர்கள் உள்ளனர். ஆனால் இதுவரை இந்த பக்தர்களை யாரும் குறி வைத்து வாக்கு வேட்டையாடியதில்லை. அரசியல் சார்பற்றுத்தான் இதுவரை செவ்வாடை பக்தர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் வரும் 2016ஆம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் இவர்களையும் ஒரு வாக்கு வங்கியாக மாற்ற முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் வரும் வகையில் செயல்பாடுகள் உள்ளன.
மகனுக்கு கட் அவுட்
பங்காரு அடிகளாரின் மகன் சமீபத்தில் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்க் கொண்டார் அப்போது அவருக்கு அரசியல் தலைவருக்கு எப்படி வரவேற்பு கொடுக்கப்படுமோ அந்த அளவுக்கு கட் அவுட்களும், கார்களின் ஊர்வலமும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றங்களின் சார்பில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ராமதாஸ் திடீர் நெருக்கம்
இந்த நிலையில் பாமக, பங்காரு அடிகளாருடன் நெருங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. வடமாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சியும் இந்த ஆலயத்தின் வளர்ச்சியைப் போல்தான் பலம் வாய்ந்ததாக மாறியுள்ளது. வரும் சட்ட மன்றத் தேர்தலை மனதில் வைத்துதான் முதல்வர் வேட்பாளராக அன்புமணியை ராமதாஸ் களத்தில் இறக்கியுள்ளார். அதே சமயம் தனது சமூகத்தவரான பங்காரு அடிகளார் வசம் உள்ள பக்தர்களின் வாக்குகளைக் கவர பாகம முயல்கிறதோ என்ற கேள்வி ராமதாஸ் - பங்காரு அடிகளார் சந்திப்பு மூலம் எழுந்துள்ளது.
பிறந்தநாளுக்கு வாழ்த்து
பங்காரு அடிகளாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை முடித்த கையோடு திடீர் என ராமதாஸ் பங்காரு அடிகளர் இல்லத்திற்கு சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி, அவருக்கு பொன்னாடையும் அணிவித்து திரும்பியுள்ளார். இந்த சந்திப்பை பங்காரு அடிகளாரே கூட எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள்.
அரசியல் சாயமா?
அரசியல் கலப்பு இல்லாத ஒரு பக்தியாளர்களின் சங்கமமாக மட்டுமே இருந்து வரும் "மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம்" அரசியல் சாயம் பூசப்பட்டு விடுமோ என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.