சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. மயங்கி விழுந்து இறந்த பெண்
Recommended Video
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பெண் ஒருவர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு செல்ல விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் அங்கு வந்தவண்ணம் இருந்தனர்.
அவர்களில் வங்கதேசத்தை சேர்ந்த சுல்தானா (40) ஒருவராகும். சுல்தானா, சிறுநீரக பிரச்சினையால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு தன்னுடைய ஊருக்கு செல்ல உறவினர்களுடன் வந்திருந்தார்.
விமான நிலையத்தில் வழக்கமான, சோதனைகளை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏற சுல்தானா காத்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய மருத்துவ குழுவினர் விரைந்து வந்து பரிசோதனை செய்தனர். பரிசோதனைக்கு பிறகு, சுல்தானா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.