திருச்சி: மன உளைச்சலில் 5வயது மகளை கொன்று தனியார் வங்கி மேலாளர் தற்கொலை
திருச்சியில் சிண்டிகேட் வங்கி மேலாளர் ஒருவர் மகளை கொன்று தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Recommended Video
திருச்சி: பலருக்கும் கடன் கொடுத்து மன உளைச்சலில் இருந்த வங்கி மேலாளர் ஒருவர் 5 வயது மகளைக் கொன்று தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையறிந்து அவரது மனைவியும் தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
தற்கொலை செய்து கொண்ட நபரின் பெயர் ராமசுப்பிரமணியன் என்பதாகும். இவர் திருச்சி சிண்டிகேட் வங்கியின் எஸ்ஆர்சி கிளை மேலாளராக இருக்கிறார். அவரது மனைவி ஆவுடையம்மாள் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்கிறார்.
சத்திரம் பேருந்து நிலையம் அருகே கணேஷ் தர்ஷன் அபார்ட்மென்டில் வசித்து வந்த ராமசுப்ரமணியன், நேற்று வியாழக்கிழமை வழக்கம்போல மதிய உணவுக்காக வீட்டிற்கு சென்றார். அப்போது யூகேஜி படிக்கும் தனது 5 வயது மகள் ஆருத்ராவையும் பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மனைவி ஆவுடையம்மாள் மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தபோது, கணவரும், குழந்தையும் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது அலறல் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் வந்து இருவர் உடலையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இருவரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆவுடையம்மாள் மருத்துவமனை முன்பு வாகனங்கள் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த கோட்டை போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமசுப்பிரமணியன் சில நிறுவனங்களுக்கு வரம்புமீறி கடன் கொடுத்ததாகவும், அதனால் அண்மைக் காலமாக மன குழப்பத்தில் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.