ஊதிய உயர்வு கோரி வருகிற 30, 31-ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்!
சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30, 31 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய போவதாக அறிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த 5-ம் தேதி மும்பையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஊழியர்களுக்கு 2 சதவீதம்தான் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வங்கி ஊழியர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகினர். வங்கி நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. அதன்படி இம்மாத இறுதியில் 30 மற்றும் 31 தேதிகளில் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்தில் தனியார், பன்னாட்டு வங்கி ஊழியர்களும் பங்கேற்க உள்ளனர். இதனால் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது. எனவே மேற்கண்ட அந்த இரண்டு நாட்களில் வங்கி பணிகள் முடங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.