வங்கி ஊழியர்கள் 2வது நாளாக ஸ்டிரைக்: பணம் இல்லாமல் காத்து வாங்கும் ஏடிஎம்கள்
Recommended Video
சென்னை: வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் இன்று 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கி ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிந்தது. இதையடுத்து அவர்களுக்கு 2 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஊதிய உயர்வு போதாது என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மே 30 மற்றும் 31ம் தேதிகளில் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். அதன்படி நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தை துவங்கினர்.
ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இந்நிலையில் இன்று 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. இன்று சம்பள நாள் என்பதால் பலரும் பணம் எடுக்க ஏடிஎம் மையங்களுக்கு செல்வார்கள். நேற்று மாலையே சில ஏடிஎம் மையங்களில் பணம் இல்லை. அதனால் ஏடிஎம்களில் இன்று சம்பள பணத்தை எடுப்பது கடினம் ஆகும்.
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் சென்னையில் உள்ள காசோலை பரிமாற்ற மையத்தில் ரூ. 7 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகளின் பரிமாற்றம் பாதிக்கப்பட்டது.