அத்தனை பெரிய மனுசனுகளும் 'வங்கி கொள்ளையர்களாக' வலம் வந்தால் நாடு தாங்குமா?
தொழிலதிபர்கள் என வலம் வருகிறவர்கள் பெரும்பாலும் வங்கி கொள்ளையர்களாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
Recommended Video
சென்னை: பொதுத்துறை வங்கிகளை சூறையாடிய 'கொள்ளையர்கள்' கைதுதான் திரும்பிய திசையெங்கும் செய்தியாக அடிபடுகிறது. விஜய் மல்லையா தொடங்கி சுபிக்ஷா சுப்பிரமணியன் வரை மலைக்க வைக்கும் அளவுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை வங்கிகளில் இருந்து சுருட்டியது அம்பலமாகியது.
மதுபான தொழிற்சாலை, விமான நிறுவனம் என இந்திய முன்னணி தொழிலதிபராக வலம் வந்தவர் விஜய் மல்லையா. ஆனால் ஆடம்பரத்தின் உச்சத்தால் அவரது சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டது.
விஜய் மல்லையா வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் ரூ9,000 கோடி. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் தேசத்தைவிட்டே தப்பி ஓடிவிட்டார் விஜய் மல்லையா.
ரூ12,000 கோடி மோசடி
லண்டனில் அமர்ந்து கொண்டு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி. பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைகளில் இருந்து ரூ4,000 கோடி கடன் பெற்று மோசடி செய்தார் என தொடங்கியது புகார். இப்போது ரூ12,000 கோடியாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறது நீரவ் மோடியின் மோசடி.
மேற்கிந்திய தீவில் தஞ்சம்
இந்த நீரவ் மோடி மீது வழக்கு பதிவு செய்யப்படும் நிலை உருவான உடனேயே தேசத்தை விட்டு எஸ்கேப். சுவிசில் இருக்கிறார் என கூறப்பட்ட நிலையில் மேற்கிந்திய தீவுகளில் பதுங்கியிருக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பல்லாயிரம் கோடி மோசடி
அடுத்ததாக ரோட்டோமேக் விக்ரம் கோத்தாரி... ரோட்டோமேக் பேனா நிறுவனத்தின் அதிபர். வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாமல் தப்பி ஓடிவிட்டார் கோத்தாரி என முதலில் செய்தி வந்தது. பின்னர் இங்கேதான் இருக்கிறேன் என விக்ரம் கோத்தாரி கூறினார். ரூ800 கோடி கடன் மோசடியில் தொடங்கிய விக்ரம் கோத்தாரியின் சரிதம் இப்போது பல்லாயிரம் கோடி ரூபாயில் போய் நிற்கிறது. இந்த விக்ரம் கோத்தாரி நல்லவேளை சிக்கிவிட்டார்.
சுப்பிரமணியன் கைது
இந்த வரிசையில்தான் சென்னை சுபிக்ஷா உரிமையாளர் சுப்பிரமணியன் சிக்கியிருக்கிறார். சுபிக்ஷா பல்பொருள் அங்காடி நடத்தி கிடைத்த லாபத்தை பங்குச் சந்தையில் கோட்டைவிட்டவர் சுப்பிரமணியன். இதற்காக நிதி நிறுவனத்தை நடத்தி ரூ150 கோடி கொள்ளையடித்தார். அத்துடன் வங்கிகளிடம் வாங்கிய ரூ700 கோடி கடனை திருப்பியும் செலுத்தவில்லை. இதனால் அமலாக்கத்துறை இன்று சுப்பிரமணியனை கைது செய்துள்ளது. இப்படி அறியப்பட்ட பெரிய மனிதர்கள் வங்கி கொள்ளையர்களாக வலம் வந்திருக்கிறார்கள் என்பது பெரும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. நாடுதான் தாங்குமோ?