அடகு வைத்த மனைவி தாலியை தர மறுத்த ஐஓபி.. அவமானத்தால் விவசாய சங்க தலைவர் தற்கொலை
வங்கிக் கடனை காரணம் காட்டி அடகு வைத்த தாலியை மீட்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அனுமதி மறுத்துள்ளது. மேலும் விவசாய சங்கத் தலைவரை வங்கியில் இருந்து இழுத்து வெளியே தள்ளியுள்ளனர் அதிகாரிகள்.
திருநெல்வேலி: விவசாயக் கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதால் மீட்கப்பட்ட தாலியை தர முடியாது என்று வங்கி அதிகாரிகள் ஆணவத்தோடு நடந்து கொண்டனர். இதனால் அவமானப்படுத்தப்பட்ட சித்தாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் வேம்புகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார்.
சித்தாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் வேம்புகிருஷ்ணன். இவர் நெல்லை மாவட்டம் மானூர் கிராமத்தைச் சேர்ந்தவர். தனது விவசாய செலவிற்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் கடன் பெற்றுள்ளார். வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் பயிர்கள் கருகி நாசமாகின. இதனால் அவரால் கடனை திரும்ப கட்ட முடியவில்லை.
இந்நிலையில் வங்கியில் அடகு வைத்துள்ள மனைவியின் தாலியையாவது மீட்டுவிட வேண்டும் என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சென்றார் வேம்புகிருஷ்ணன். அங்கு அவருக்கு வழங்கப்பட்ட பயிர் கடனை காரணம் காட்டி தாலியை திரும்பத் தர வங்கி அதிகாரிகள் மறுத்துள்ளனர். மேலும் அவமரியாதையோடு விவசாய சங்கத் தலைவரான வேம்புகிருஷ்ணனை பேசியுள்ளார். அதோடு நிற்காமல் வங்கியில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்து வந்து வெளியே வங்கி அதிகாரிகள் தள்ளியுள்ளனர்.
இதனால் மனம் உடைந்த வேம்புகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.
விவசாயிகளை வெளியே இழுத்து தள்ளி அவமானப்படுத்துவதும், டிராக்டர்களை பறிமுதல் செய்து அலைகழிப்பதையும் செய்து வரும் வங்கிகளின், வங்கி அதிகாரிகளின் திமிர்தனம் என்று முடிவிற்கு வரும் என்று தெரியவில்லை. இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.