வங்கி மோசடிகளை அம்பலப் படுத்தியவர்கள் மீது வழக்கா?- சென்னை ஹைகோர்ட் கண்டனம்
சென்னை: ரூபாய் நோட்டு கட்டுக்கள் காணாமல் போன வழக்கில், வங்கியில் நடக்கும் மோசடிச் செயல்கள் குறித்து அம்பலப்படுத்தியதற்காக 3 ஊழியர்களை வங்கி நிர்வாகம் பழிவாங்கும் வகையில் நடந்து கொண்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
2006ம் ஆண்டு மே மாதம் கோவை அவினாசியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையிலிருந்து 6 கட்டு 500 ரூபாய் நோட்டுக்கள் காணாமல் போயின. இவற்றின் மதிப்பு ரூ. 30 லட்சமாகும். வங்கியின் ஸ்டிராங் ரூமில் இந்த நோட்டுக்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக எஸ்பிஐ அம்பேத்கர் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தங்கச்சாமி, பொதுச் செயலாளர் குணசேகர், பொருளாளர் அரசுக்குமார் ஆகியோர் எஸ்பிஐ மேலிடத்திற்குக் கடிதம் மூலம் புகார் தெரிவித்தனர். இந்த விவகாரத்திற்கு பொது மேலாளர் பிரதீப் செளத்ரி தான் காரணம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். போஸ்டர்களையும் ஒட்டினர்.
இதற்கு முன்பு சேலத்தில் ரூ. 5 லட்சமும், ராசிபுரத்தில் ரூ. 6 லட்சமும், அமிஞ்சிக்கரையில் ரூ. 5.5லட்சமும், குளித்தலையில் ரூ. 5 லட்சமும், அவினாசியில் ரூ. 6 லட்சமும், மீண்டும் அவினாசியில் ரூ. 1 லட்சமும் காணாமல் போயுள்ளதாகபும் அவர்கள் தங்கள் புகாரில் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் இந்த மூவருக்கும் அதிரடியாக வங்கி நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் மெமோவும் அனுப்பியது. அது போக அவதூறு வழக்கும் தொடரப்பட்டது. ஒருவரை வேலையிலிருந்தும் டிஸ்மிஸ் செய்தது.
இதை எதிர்த்து மூன்று பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நதிமன்றம், வங்கி நிர்வாகத்தின் நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், பொது நலன் கருதி இவர்கள் வங்கி நிர்வாகத்திற்கு அனுப்பிய புகார்களை அவதூறு என்று கூறியது தவறானதாகும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மேலும், முறைகேடுகளை அம்பலப்படுத்தியற்காக ஒரு ஊழியரை பழி வாங்க முடியாது என்றும், அவதூறு வழக்கும் தொடர முடியாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து நீதிபதி ராமசுப்ரமணியன் தலைமையிலான பெஞ்ச் கூறுகையில், ‘பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இதுபோல அவதூறு வழக்குத் தொடருவது துரதரிஷ்டமானது. மேலும் தொழிலாளர் சங்கத்தின் நடவடிக்கைகளையும் அது தடுக்க முற்பட்டுள்ளது. இதுவும் தவறானதாகும்' என்று தெரிவித்துள்ளனர்.